வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (17:35 IST)

திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில் பராமரிப்புக்கு உச்சநீதிமன்றக்குழு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலின் நிர்வாக பொறுப்புகளை திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய குழுவிடம் இந்திய உச்சநீதிமன்றம் ஒப்படைத்துள்ளது. அத்துடன் அந்த கோவிலின் கணக்குகளை தணிக்கை செய்ய முன்னாள் கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் தலைமையிலான குழுவை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலில் நிர்வாக முறைகேடுகள் நடந்து வருவதாக சந்தேகிப்பதாகவும், கோயில் கணக்குகளை தணிக்கை செய்ய முன்னாள் கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் தலைமையிலான குழு நியமிக்கப்பட வேண்டும் என்றும் கோயிலின் சொத்து மதிப்புகள் குறித்து விசாரணை செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் நியமித்த குழு பரிந்துரைத்ததை அடுத்து உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறபித்துள்ளது.
 
இன்று இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள் ஆர்.எம்.லோதா மற்றும் ஏ.கே.பட்நாயக் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலின் நிர்வாக அதிகாரியாக ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரியையும் குருவாயூர் கோவிலின் முன்னாள் நிர்வாகியையும் நியமித்துள்ளது.
 
கோவில் பொக்கிஷங்கள் களவுபோகின்றனவா?
 
திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளிட்ட பொக்கிஷங்கள் இருப்பது கடந்த 2011ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த பொக்கிஷங்களை மதிப்பிடவும், அது தொடர்பிலான விசாரணையை மேற்கொள்ளவும் உச்ச நீதிமன்றம் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் தலைமையிலான ஒரு குழுவை நியமித்தது.
 
அந்த குழு அங்கு பயணித்து தங்கி விசாரணை செய்து பின் அது தொடர்பில் சமர்பித்த அறிக்கையில், கோயில் கணக்குகளை தணிக்கை செய்ய முன்னாள் கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் தலைமையிலான குழு நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் அறக்கட்டளை மற்றும் அது சார்ந்த நிறுவனங்களின் கடந்த 25 ஆண்டு காலத்திற்கான கணக்கு வழக்குக்கள் தொடர்பிலான தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும் அந்த கோவில் நிர்வாகம் தொடர்பிலான வங்கிக் கணக்குகளையும் பிற எல்லா உரிய பதிவுகளையும் கோவிலின் தற்போதைய அறங்காவலர் மூலம் திருநாள் ராம வர்மா நீதிமன்றத்தில் சமர்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறபிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பதாக கருதப்படும் ரகசிய ‘பி’ அறையை திறக்க மன்னர் குடும்பத்தினர் அனுமதி வழங்கவில்லை என்றாலும் அந்த ரகசிய ‘பி’ அறை இதற்கு முன்னர் பல முறை திறக்கப்பட்டதற்கு நேரில் கண்ட சாட்சியங்கள் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறையில் இருக்கும் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை தங்களுக்கு சொந்தமான சொத்துக்களாக கூறி மன்னர் குடும்பத்தினர் அவற்றை விற்பதாக சந்தேகிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில், கோயிலுக்குள் தங்க முலாம் பூசும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரகசிய அறையில் இருந்து தங்க நகைகளை கடத்தி அதற்கு பதிலாக போலி நகைகளை தங்க முலாம் பூசி ரகசிய அறையில் வைத்திருக்கலாம் என்ற சந்தேகமும் இதனால் எழுந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.