1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (12:40 IST)

மலேசியாவில் ஊடுருவிய ஓமிக்ரான்: 19 வயது பல்கலை மாணவிக்கு தொற்று உறுதி

உலக நாடுகளுக்குப் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கொரோனாவின் புதிய திரிபான ஓமிக்ரான் மலேசியாவிலும் ஊடுருவி உள்ளது. இத்தகவலை அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் இன்று தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 19ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த, மலேசியர் அல்லாத பல்கலைக்கழகமாணவி ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
 
நவம்பர் 11 முதல் 28ஆம் தேதி வரை கோலாலம்பூர் விமான நிலையத்தில் வந்திறங்கியவர்களில் 74 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
 
மேலதிக பரிசோதனைகள் நடத்தப்பட்டபோது 19 வயதான அம்மாணவிக்கு ஓமிக்ரான் திரிபு பாதிப்பு இருப்பது உறுதியானது.
 
டிசம்பர் 2ஆம் தேதி பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்றதாகத் தெரிவித்த மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின், பாதிக்கப்பட்ட மாணவி பேராக் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருவதாகவும், தென்னாப்பிரிக்காவில் இருந்து சிங்கப்பூர் வழியாக அவர் மலேசியா வந்தடைந்ததாகவும் தெரிவித்தார்.
 
"கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனை முடிந்த பின்னர் அம்மாணவி பேருந்து மூலம் ஈப்போ நகருக்குச் சென்றுள்ளார்.
 
அந்தப் பேருந்தில் அவருடன் பயணம் மேற்கொள்ள பயணிகள், ஓட்டுநர் உள்ளிட்ட ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் யாருக்கும் தொற்றுப் பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.
 
எனினும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்," என்றார் அமைச்சர் கைரி. முன்னதாக ஒமிக்ரான் பாதிப்பு அபாயமுள்ள 50 நாடுகளை அடையாளம் கண்டுள்ளதாக அறிவித்த மலேசியா, அவற்றுள் 26 நாடுகளுக்கு பயணத்தடையும் விதித்துள்ளது.