1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 11 டிசம்பர் 2021 (14:10 IST)

சீனாவுக்கு ஆதரவாக தைவான் உறவை முறித்துக்கொண்ட நிகரகுவா

தைவான் நாட்டுடனான ராஜீய உறவை நிகரகுவா துண்டித்துக்கொண்டது. தங்கள் நாட்டில் இருந்து பிரிந்து சென்ற பிராந்தியமாக தைவானை சீனா கருதுகிறது. எப்போதாவது ஒருநாள், தைவான் சீனாவுடன் மீண்டும் இணையும் என சீனா எதிர்பார்க்கிறது. ஆனால், ஜனநாயக ரீதியில் ஆட்சி செய்யும், சுதந்திரமான, இறையாண்மை மிக்க நாடாக தைவான் தன்னைக் கருதுகிறது.

இந்நிலையில், சில நாடுகள் சீனாவுக்கு ஆதரவாக, தைவானுடனான உறவை முறித்துக்கொண்டுள்ளன. அந்த பட்டியலில் சமீபத்தில் நிகரகுவா இணைந்துள்ளது. “தைவானுடனான ராஜீய உறவை நிகரகுவா முறித்துக்கொண்டது. இதன்மூலம், தைவானுடனான அதிகாரப்பூர்வ உறவு அல்லது தொடர்பை துண்டித்துள்ளது” என, நிகரகுவா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், “ஒரேயொரு சீனா மட்டுமே இருக்கிறது என அங்கீகரித்துள்ளதாக”, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இருநாடுகளின் பல ஆண்டு நட்பு இதன்மூலம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஆழ்ந்த கவலையில் இருப்பதாகவும் தைவான் தெரிவித்துள்ளது.
 
2016-ல் தைவான் அதிபராக சாய் இங்-வென் பதவியேற்றதிலிருந்து தைவானின் சர்வதேச நட்பு நாடுகளின் எண்ணிக்கை 21-ல் இருந்து 14 ஆக சரிந்துள்ளது. தங்களுடன் ராஜீய உறவை வைத்துக்கொள்ள விரும்பும் நாடுகள், தைவானுடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என சீனா ஏற்கனவே தெரிவித்திருந்தது.
 
அந்த வகையில், நிகரகுவா நாட்டின் முடிவை சீனா வரவேற்றுள்ளது. “தைவானுடனான தொடர்பை விரிவுபடுத்த வேண்டும்” என, நாடுகளுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.