1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 20 ஜனவரி 2022 (20:02 IST)

மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சருக்கு நீதிமன்ற காவல் 14 நாட்களுக்கு நீட்டிப்பு!

மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 
கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி அமலாக்க இயக்குநரகத்தால் (ED) அவர் கைது செய்யப்பட்டார். பணமோசடி தடுப்புச் சட்டம் பிரிவு 19ன் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். மிரட்டி பணம் பறித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
 
அதைத்தொடர்ந்து இயக்குநர புலனாய்வாளர்களால் விசாரிக்கப்பட்ட அவர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். மும்பையில் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படும் ஆர்தர் ரோடு சிறையில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
என்ன வழக்கு?
 
முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு வெளியே வெடிகுண்டு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, இந்த வழக்கில் போலீஸ் அதிகாரி சச்சின் வாஜேவின் பங்கு மற்றும் அவரது குற்றச்சாட்டுகள் காரணமாக மகாராஷ்டிர உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
 
இந்த வழக்கில் அனில் தேஷ்முக்கின் தனி உதவியாளர்கள் சஞ்சய் பலாண்டே மற்றும் குந்தன் ஷிண்டே ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் சஞ்சீவ் பலாண்டே மற்றும் குந்தன் ஷிண்டே ஆகியோரை காவலில் வைக்க அமலாக்கத்துறை இயக்குநரகம் கோரியது.
 
அனில் தேஷ்முக் தான் இந்த சதித்திட்டத்தின் முக்கிய நபராக இருந்ததாக அதன் விசாரணை அதிகாரிகள் கூறினர். மேலும், விசாரணையின் போது சஞ்சீவ் பலாண்டே, ஐபிஎஸ் அதிகாரிகளின் இடமாற்றத்தின் பின்னணியில் அனில் தேஷ்முக் இருப்பதாக குற்றம்சாட்டினார். அதிகாரிகளின் இடமாற்றத்திற்காக லஞ்சம் பெற்றதாக தேஷ்முக் மீது குற்றம்சாட்டப்பட்டது.
 
அனில் தேஷ்முக்கிடம் இருந்து தான் நேரடியாக ஆர்டர் பெறுவதாகவும், தேஷ்முக்கின் விருப்பப்படியே குந்தன் ஷிண்டேவுக்கு ரூ.4.70 கோடி கொடுத்ததாகவும் சச்சின் வாஜே கூறியிருந்தார். தேஷ்முக் மீது மும்பை காவல்துறையின் முன்னாள் ஆணையர் பரம்பீர் சிங்கும் இதேபோல குற்றம்சாட்டினார்.