1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (22:03 IST)

இலங்கை அரசு தொலைக்காட்சி சேனலை வாங்கியதா லைகா நிறுவனம்?

லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரனுடன் ரணில் விக்ரமசிங்க இருப்பது போன்ற புகைப்படம் இலங்கை ஊடகங்களில் வெளியானது
 
இலங்கையின் அரசு தொலைக்காட்சியான ‘ஐ’சேனலை லைகா நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாக வெளியான தகவல் போலியானது என ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.
 
ஒவ்வொரு வாரமும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
சேனல் ஐ தொலைக்காட்சி சேவையை லைகா நிறுவனத்திற்கு வழங்கும் யோசனை அமைச்சரவையில் நிராகரிக்கப்பட்டதாக இன்றைய தினம் வெளியான பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
 
எனினும், இந்த செய்தி போலியானது என அமைச்சர் தெரிவித்தார்.
 
''இலங்கை ரூபவாஹினி சேவைக்கு சொந்தமான சேனல் ஐ தொலைக்காட்சியை குத்தகை அடிப்படையில் லைகா நிறுவனத்திற்கு வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை, அமைச்சரவை நிராகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று மாலை அமைச்சரவை கூடியது" என்ற வகையில் பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.
 
அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடைபெறவில்லை எனவும், அமைச்சரவை கூட்டம் நேற்று முற்பகலே கூடியது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
 
சேனல் ஐ தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நேரத்தை மாத்திரம் குத்தகைக்கு விட்டதாக அமைச்சர் தெரிவித்தார்
 
சேனல் ஐ தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நேரத்தை மாத்திரம் குத்தகைக்கு விட்டதாக அமைச்சர் தெரிவித்தார்
 
 
''சேனல் ஐ தொலைக்காட்சியை விற்பனை செய்யவோ அல்லது குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கோ யோசனை முன்வைக்கப்படவில்லை. இலங்கை ரூபவாஹினி கூட்டுத் ஸ்தாபனத்தின் கீழ் இயங்கும் சேனல் ஐ தொலைக்காட்சி சேவையை வருமானம் இல்லாமையினால் நடத்தி செல்ல முடியவில்லை.
 
மின்சார கட்டணத்தை செலுத்துவதில் கூட சிரமமான நிலைமை காணப்படுகின்றது. மிகவும் நட்டத்தில் இயங்குகின்ற சேனல் ஐ தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நேரத்தை மாத்திரம் குறுகிய கால குத்தகை அடிப்படையில் ரூபவாஹினி நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினால் தீர்மானிக்கப்பட்டு, எனது அனுமதியுடன் அதனை குத்தகைக்கு வழங்கியுள்ளனர். பாரிய குத்தகை தொகை கிடைக்கின்றது. மாதமொன்றிற்கு 25 மில்லியன் ரூபா கிடைக்கின்றது." என பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.
 
ரூபவாஹினி நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு வணிக ரீதியிலான தீர்மானங்களை எடுக்கும் உரிமமானது, நிறுவனத்தின் சட்டத்திலேயே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
 
இந்த நிலையில், நட்டத்தில் இயங்கும் நிறுவனத்தை லாபம் ஈட்டும் வகையில், சேனல் ஐ தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நேரத்தை லைகா நிறுவனத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஏனைய விளையாட்டுக்களுக்காக மாத்திரமே இந்த ஒளிபரப்பு நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
லைகா நிறுவனமானது, இலங்கையில் பல ஊடக நிறுவனங்களை நடத்தி வருகின்றது.
 
இலங்கையின் மிகவும் பழைய தனியார் தொலைக்காட்சி சேவையான சுவர்ணவாஹினி ஊடக வலையமைப்பை லைகா நிறுவனம் வாங்கி நடத்தி வருகின்றது.
 
அத்துடன், ஐரோப்பிய நாடுகளில் ஒளிபரப்பான ஆதவன் தொலைக்காட்சியின் சேவையை இலங்கையில் தற்போது விரிவுப்படுத்தியுள்ளது.
 
அதேபோன்று, பாரிய நிதி ஒதுக்கீட்டில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலான இணைய ஊடக வலையமைப்பொன்றையும் லைகா நிறுவனம் இலங்கையில் அண்மையில் ஆரம்பித்து வருகின்றது.
 
இவ்வாறு பல ஊடக நிறுவனங்களை தன்வசப்படுத்திய லைகா நிறுவனம், தற்போது அரச தொலைக்காட்சி சேவையான சேனல் ஐ தொலைக்காட்சியின் வானலை நேரத்தையும் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
 
பிரிட்டனுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, லைகா நிறுவனத்தின் தலைவரை அங்கு சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.
 
இலங்கையை பூர்வீகமாக கொண்ட லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா, ஐரோப்பிய நாடுகளை இலக்காக கொண்டு பல நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
 
குறிப்பாக லைகா தொலைபேசி நிறுவனத்தின் ஊடாக முன்னேற்றம் அடைந்த சுபாஷ்கரன் அல்லிராஜா, தென்னிந்திய சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஒருவராக திகழ்கின்றார்;.
 
'என்னை வளர்த்த யானையும், அதற்கு நான் பட்ட கடனும்' - இலங்கை வாலிபரின் உணர்ச்சிபூர்வ வாழ்க்கை கதை
 
தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் பல திரைப்படங்களை லைகா நிறுவனம் தயாரித்து வருகின்றது.
 
இந்தநிலையில், இலங்கை ஊடகத்துறையின் பெரும் பகுதியை லைகா நிறுவனம் தற்போது தனதாக்கிக்கொண்டுள்ளது.
 
அதுமாத்திரமன்றி, இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனத்தை லைகா நிறுவனம் கொள்வனவு செய்ய தயாராகி வருவதாக பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர். அத்துடன், பல நிறுவனங்களை லைகா நிறுவனம் கொள்வனவு செய்ய உள்ளதாகவும் பலர் கூறி வருகின்றனர்.