வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 8 ஏப்ரல் 2020 (12:32 IST)

கொரோனா வைரஸ்: இந்தியாவில் 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மரணங்கள்

கொரோனா தொடர்பாக இந்திய அளவில் உள்ள முக்கிய செய்திகளைப் பார்ப்போம்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5194ஆக அதிகரித்துள்ளது என்று இந்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை தெரிவித்துள்ளது.

இவர்களில் 401 பேர் குணமடைந்துள்ளனர், 149 பேர் மரணமடைந்துள்ளார் மற்றும் 4643 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரங்களில் மட்டும் 773 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது மற்றும் 35 பேர் மரணமடைந்துள்ளார் என்று இன்று காலை சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் இந்தியாவில் தொடங்கியபின் ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் அதிகபட்ச மரணங்கள் நிகழ்ந்தது இதுதான். இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 1018ஆக உள்ளது. 690 மற்றும் 576 எனும் எண்ணிக்கையுடன் தமிழகம் மற்றும் டெல்லி ஆகியவை இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளன.

இதனிடையே, ஊரடங்கை நீட்டிக்கக் கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுத தமது அரசு தாயாராக இருப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோரி இருந்தார்.
ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில முதல்வர்களும், மருத்துவ நிபுணர்களும் கேட்டுக்கொண்டதை அடுத்து, இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

கொரோனா பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்களுக்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான இன்சுரன்ஸ் வழங்க இருக்கிறது உத்தர பிரதேச அரசு.

கொரோன வைரஸ் தொடர்பான பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்கள் தாக்கப்படுவது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அரங்கேறி வருகிறது.

உத்தர பிரதேசத்தில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் குறித்த தகவலை சேகரித்துக் கொண்டிருந்த ஆஷா (அங்கீகரிக்கப்பட்ட சுகாதார செயற்பாட்டாளர்) பணியாளர் பீனா யாதவ் தாக்கப்பட்டிருக்கிறார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்


5194
மொத்தம்

402
குணமடைந்தவர்கள்

149
இறந்தவர்கள்

முஸ்லிம்களால் மன்னிப்பின் இரவாக அனுசரிக்கப்படும் ஷபே பராஅத் இன்றிரவு (புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதற்காக ஊரடங்கு உத்தரவை மீறி முஸ்லிம் மக்கள் வெளியே வர வேண்டாம் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுபோல அலிகர் தலைமை உலாமாவும் யாரும் பள்ளிவாசலில் கூட வேண்டாம் என கோரி உள்ளார்.