வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 ஜூன் 2020 (14:34 IST)

இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்றக் கோரிக்கை: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஒத்திவைப்பு

இந்தியாவின் பெயரை 'பாரத்' என்று மாற்றுமாறு கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை இந்திய உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவை பெயர் மாற்றத்துக்கு ஏற்ற வகையில் திருத்துமாறு அந்த மனு கோரியிருந்தது.

"இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்," என அரசமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவு கூறுகிறது.

இந்த மனுவை இன்று விசாரிக்கவிருந்த அமர்வு இன்று விசாரிக்க முடியாமல் போனதால் இம்மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்ற மனு ஏன்?

'பாரத்' என்பதே இந்தியாவின் உண்மையான பெயர் என்று தனது மனுவில் கூறியிருந்த, நமஹா எனும் அந்த மனுதாரர், அவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்படுவது விடுதலைக்காக போராடியர்களுக்கு நியாயம் செய்யும் என்றும் இந்திய விழுமியங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்தியா எனும் பெயர் 'அடிமைத்தனத்தின் அடையாளம்' என்றும் கூறியிருந்தார்.

1948இல் நடந்த அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் கூட்டத்திலும் 'இந்தியா' எனும் பெயருக்கு பதிலாக 'பாரத்', 'இந்துஸ்தான்', 'பாரத் வர்ஷா' உள்ளிட்ட பெயர்கள் வைக்க ஆதரவாக எம். அனந்தசயனம் அய்யங்கர் வாதிட்டதாக அவர் மனுவில் கூறியுள்ளார்.

ஆதார் அட்டையில் 'பாரத் சர்கார்', ஓட்டுநர் உரிமத்தில் 'யூனியன் ஆஃப் இந்தியா' என பல பெயர்கள் இருப்பதால், 'பாரத்' என்று சீராக ஒரே பெயர் வைக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.