1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (11:20 IST)

புதிய கட்சி? ஜெ. மரணம்? எதை சொல்லப் போகிறார் ஓ.பி.எஸ்? - பீதியில் சசிகலா தரப்பு

ஜெ.வின் பிறந்த நாள் விழாவான இன்று ஆர்.கே.நகர் தொகுதியில் பேசவுள்ள ஓ.பி.எஸ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதால் சசிகலா தரப்பு பீதியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
ஜெ.வின் 69வது பிறந்த நாள் இன்று அதிமுக தொண்டர்களால் கொண்டாடப்படுகிறது. ஆர்.கே.நகரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை ஓ.பி.எஸ் அணியினர் ஏற்பாடு செய்துள்ளனர். அங்கு, ஓ.பி.எஸ், தமிழக அரசியலை மாற்றியமைக்கக் கூடிய அறிவிப்புகளை வெளியிடுவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் ஆவடி எம்.எல்.ஏ மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். 
 
எனவே, இன்று ஆர்.கே.நகரில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் பேசும் ஓ.பி.எஸ் மக்கள் முன்பு பல முக்கிய அறிவிப்புகளையோ அல்லது தகவல்களையோ வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஏற்கனவே, ஜெ.வின் சமாதியில் தியானம் இருந்து விட்டு செய்தியாளர்களிடம் சசிகலா தரப்பு பற்றி பரபரப்பு பேட்டியளித்த ஓ.பி.எஸ் வெறும் 10 சதவீதம்தான் நான் கூறியிருக்கிறேன் எனக் கூறியிருந்தார். எனவே, மீதி 90 சதவீதத்தையும் அவர் சொல்வாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
 
மேலும், தனிக்கட்சி தொடங்கும் திட்டமா? ஜெ.வின் மரணம் குறித்த தகவலா? என அவரது ஆதரவாளர்களிடையே பரபரப்பையும், சசிகலா குடும்பத்தினரிடையே பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.