வியாழன், 3 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2024 (07:20 IST)

என் தனிப்பட்ட விஷயத்தில் உங்கள் அரசியலை இழுக்காதீர்கள்… அமைச்சருக்கு சமந்தா காட்டமான பதில்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த சில ஆண்டுகளாக மையோசிட்டீஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அதே போல அவரது குடும்ப வாழ்க்கையும் கடந்த சில ஆண்டுகளில் பிரச்சனைகளில் சிக்கியது. அவரது காதல் கணவரான நாக சைதன்யாவை சமந்தா விவாகரத்து செய்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த பரபரப்புகள் சற்றுத் தணிந்துள்ள நிலையில் இப்போது ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் கொண்டா சுரேகா சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்குப் பின்னால் முன்னாள் அமைச்சர் கே டி ராமாராவ் இருந்தார் என ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு தன்னுடைய பதிலைக் கொடுத்துள்ளார் சமந்தா “அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்கள் எதிரிகளை விமர்சிக்க, அரசியலை விட்டு ஒதுங்கியிருக்கும் கலைஞர்களின் வாழ்க்கையைப் பயன்படுத்தாதீர்கள். பொறுப்பில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்திற்கு நீங்கள் பேசியிருக்கும் கருத்துகள் தவறானவை மற்றும் கண்டிக்கத்தக்கவை.  அதை உடனடியாக நீங்கள் திரும்பப் பெறவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடைய விவாகரத்து என்பது தனிப்பட்ட விஷயம். பரஸ்பர சம்மதத்துடன்தான் எங்கள் மணவாழ்க்கை முடிவுக்கு  வந்தது.  அதில் எந்த அரசியல் தலையீடுகளும் இல்லை. என்னுடைய பெயரை உங்கள் அரசியல் சண்டைகளில் பயன்படுத்த வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.