ஸ்ரீகாந்த் நடித்துள்ள சவுகார்பேட்டை நேற்று வெளியாகி, பரவலான வரவேற்புடன் ஓடுகிறது. இந்த பேய் படத்தில் ஏற்பட்ட அனுபவங்களை ஸ்ரீகாந்த் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
ரொமான்டிக் ஹீரோவாக டூயட் பாடி வந்த நீங்கள் பேய்ப்படத்தில் நடிக்கத் துணிந்தது ஏன்?
ஒரு வித்தியாசம் வேண்டும் என்றுதான் இந்தப் படத்தில் நடித்தேன். இது ஒரு பேய்ப்படம் என்றாலும் முழுமையான கமர்ஷியல் படம். ஒரு வணிகரீதியிலான படத்துக்கு என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அத்தனையும் இதில் இருக்கிறது. ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட்ஸ் எல்லாமும் இதில் இருக்கிறது. எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்தி செய்யும்.
சுடுகாடு, மயானம் என்று படப்பிடிப்பு நடந்ததாமே..?
ஆமாம்.. வடசென்னைப் பகுதியிலும் அசோக் நகர் பகுதி சுடுகாடுகளில் படப்பிடிப்பு நடந்தது. யதார்த்தம் வேண்டும் என்பதற்காக அந்த இடங்களில் நடந்தது. இது எங்களுக்கு சங்கடமான, அசௌகர்யமான உணர்வைத்தான் கொடுத்தது. இருந்தாலும் நாங்கள் வேறு வழியில்லாமல் நடிக்க வேண்டியிருந்தது. ஒரு பக்கம் பிணம் எரிந்து கொண்டிருக்கும், இன்னொரு பக்கம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் . இப்படி இந்தப்படம் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. பேய்க்கதை என்றால் பெரும்பாலும் இரவில் இருட்டில்தான் நடக்கும். இதில் கதை பகலில் திறந்த வெளியில்தான் நடக்கும். அப்படிக் கதை காட்சி அமைத்து பயமுறுத்துவது சிரமமானது மட்டுமல்ல சவாலும்கூட.ஆனால் இயக்குநர் வடிவுடையான் அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் .
இரண்டு வேடங்களில் நடித்தது எப்படி இருந்தது?
முதன் முதலில் இதில் நான் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறேன். சென்னைவாழ் இளைஞனாகவும் பேய் விரட்டும் மந்திரவாதியாகவும் இரண்டு வேடங்கள். சில நேரம் இரு வேடங்களிலும் ஒரே நாளில் நடிக்க வேண்டியிருந்தது. அந்த மந்திரவாதி மேக்கப் போட குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். அதைக் கலைக்கவும் ஒரு மணி நேரம் ஆகும். இப்படிப்பட்ட சூழலில் இரண்டு தோற்றத்திலும் நடிக்க வேண்டியிருந்தது. அப்போதுதான் இருவேடங்கள் ஏற்பதிலுள்ள சிரமம் புரிந்தது. எல்லாவற்றையும் அனுபவமாகவே எடுத்துக் கொண்டேன். ஆர்வமாக நடித்தேன்.
உடன் நடித்தவர்கள் பற்றி..?
எனக்கு ஜோடி ராய் லட்சுமி. அவர் இதற்கு முன் இப்படிப்பட்ட பேய்ப்படங்களில் நடித்து அனுபவம் உள்ளவர். படப்பிடிப்பில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது. சண்டைக் காட்சிகளில் எல்லாம் டூப் போடாமல் நடித்தார். அவருக்கு அப்போது அடி கூட பட்டது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வலியைத் தாங்கிக் கொண்டு நடித்துக் கொடுத்தார். நிஜமாகவே ராய் லட்சுமி அர்ப்பணிப்புள்ள நடிகைதான். படப்பிடிப்பில் அவர் பேய்க்கதைகள் சொல்லி உதவி இயக்குநர்களை அடிக்கடி பயமுறுத்துவார்.
மேலும் அடுத்த பக்கம் பார்க்க.............
இந்தப் படம் தெலுங்கிலும் வெளியாகியுள்ளதே...?
வழக்கமாக என் படங்கள் தமிழில் வெளியான பிறகுதான் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகும். இது ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகிறது. நண்பன் படத்துக்குப் பிறகு என் படம் தமிழிலும் தெலுங்கிலும் இப்படி வெளியாவதில் மகிழ்ச்சி.
உண்மையில் உங்களுக்குப் பேய் பயம் உண்டா?
பேய் பயம் யாருக்குத்தான் இருக்காது? எனக்கு சின்ன வயதிலிருந்து இருட்டு, பேய் என்றால் பயம்தான். இரவில் தனிமையான சூழல் என்றால் யாரோ இருப்பது போலப் பயப்படுவேன். இந்தப் பயம் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை இருந்தது. ஒரு கட்டத்தில் இதிலிருந்து மீள வேண்டும், தைரியமான ஆளாக மாற வேண்டும் என்று முடிவெடுத்தேன். பயங்கரமான ஹாரர் மூவீஸ் பார்க்க ஆரம்பித்தேன். சரமாரியாக பேய்ப் படங்கள் பார்க்கத்
தொடங்கினேன். அப்போதும் திகிலுடன்தான் பார்த்தேன். என்னைப் பெரிதாக பயமுறுத்திய படம் 'ஓமன்' தான்.
உங்கள் அடுத்த படம் நம்பியார் தாமதமாகிறதே ஏன்?
அது என் சொந்தப்படம். இதுவரை சொல்லப்படாத கதை. ஒருவரிடம் உள்ள நல்ல கெட்ட குணங்களே நம்பியார் எம்.ஜி.ஆர் குணங்களாக காட்டப்பட்டுள்ளன. எல்லாருக்குள்ளும் இருக்கும் நம்பியார் பற்றிச் சொல்கிற கதை இது. அந்த நம்பியார் குணத்தை அடக்கிக்கொண்டால் எம்.ஜி.ஆர் ஆகலாம். நான் தயாரித்த இப்படத்தின் மூலம் பல அனுபவங்கள் கிடைத்தன. சில பாடங்கள் படிக்க முடிந்தது. எல்லாவற்றையும் கடந்து விரைவில் படம் வெளியாகும்.