1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 18 பிப்ரவரி 2019 (08:50 IST)

உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது: சிசிஐ வலியுறுத்தல்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி விரைவில் நடைபெறவுள்ள நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுவதை தவிர்க்க வேண்டும் என்று மும்பையைச் சேர்ந்த சிசிஐ என்ற கிரிக்கெட் கிளப் பிசிசிஐயை வலியுறுத்தியுள்ளது. இந்த அமைப்பு ஏற்கனவே தனக்கு சொந்தமான உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த இம்ரான்கான் படத்தை மூடி மறைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்ததை அடுத்து பாகிஸ்தானுடன் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி உள்பட எந்த போட்டியிலும் விளையாடக்கூடாது என்று சிசிஐ கிளப் செயலாளர் சுரேஷ் பாப்னா கூறியுள்ளார்.

பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கூறிய  சுரேஷ் பாப்னா, இந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது என்றும், புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதில் சொல்லியே ஆகவேண்டும்’ என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கண்ணா அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் குறைந்தது ரூ.5 கோடியை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஜூன் 16ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.