போகி தினத்தன்று பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்கு பிடித்த உணவைபடைத்து, புத்தாடைகள் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைத்து தீப ஆராதனை செய்வதும் வழக்கத்தில்உள்ளது.
பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர். பிறகு வீட்டின் வாயிலை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து அழகான கோலம்போடப்படும். இவ்வாறாக பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக போகிபண்டிகை கொண்டாடப்படுகிறது.