தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையால் இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துவிட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது குறித்து சட்ட அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
மத்திய, மாநில அரசு இடையே மும்மொழிக் கொள்கை குறித்த வாக்குவாதம் எழுந்துள்ள நிலையில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த முடியாது என மறுத்து வருகின்றன. இதுகுறித்து கருத்து கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை பின்பற்றுவதால் தமிழக இளைஞர்கள் பல வேலைவாய்ப்புகளை இழந்துள்ளதாகவும், தமிழகத்தில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் பேசியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து ஆளுநரை விமர்சித்து பேசியுள்ள சட்டத்துறை அமைச்சர் ரகுபதி “தமிழ், தமிழ்நாடு, தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றின் மீது ஆளுநர் வெறுப்பை உமிழ்கிறார். மொழி உணர்ச்சிக் குறித்து தமிழர்களுக்கு ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம்.
பொருளாதாரம், கல்வியில் தமிழகம் பெற்றுள்ள வளர்ச்சியை ஆளுநரால் பொறுக்க முடியவில்லை. தமிழ்நாடு பின் தங்கியுள்ளதாக ஆளுநர் கூறுகிறார். எதில் பின் தங்கியுள்ளது என்று அவரால் சொல்ல முடியுமா? இந்தியை திணிக்க வேண்டுமென்ற ஆதிக்கவாதிகளின் சதியை தமிழர்கள் அறிவார்கள்.
சனாதனம், சமஸ்கிருதத்தை தமிழ்நாட்டில் காலூன்ற செய்திட ஆளுநர் குட்டிக்கரணம் போடுகிறார். மொழித் தேர்வு, மொழித் திணிப்புக்கு இடையேயான வித்தியாசம் எங்களுக்கு தெரியும். ஆளுநரின் நாடகங்கள் தமிழ்நாட்டில் செல்லுபடியாகாது” என்று கூறியுள்ளார்.
Edit by Prasanth.K