வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 18 ஜூலை 2024 (11:35 IST)

தமிழ்நாடு நாள் இன்று கொண்டாட்டம்..! முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

MK Stalin
தமிழ்நாடு நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் “தமிழ்நாடு வாழ்க” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வர் அண்ணா சட்டப்பேரவையில் பேசிய வீடியோ காட்சியை பகிர்ந்துள்ளார்.
 
நாடு விடுதலைக்கு முன்னர் மாகாண அமைப்பு முறையே நடைமுறையில் இருந்தது. சென்னை மாகாணம் என்பது இன்றைய கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிஷா மாநிலங்களின் பல பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்து வந்தது. மாகாண அமைப்பு முறையானது பல மாநிலங்களாக 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ல் மாற்றி அமைக்கப்பட்டது. இதனடிப்படையில் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் நவம்பர 1-ந் தேதியை தங்களது மாநிலம் உருவாக்கப்பட்ட நாளாக கொண்டாடி வருகின்றன.
 
மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னரும் சென்னை மாகாணம்- மதராஸ் மாகாணம்- மெட்ராஸ் மாகாணம் என்ற பெயர்களிலேயே அழைக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்று மாநிலங்கள் பிரிவினைக்கு முன்னரே 1955-லேயே தந்தை பெரியார் குரல் கொடுத்தார். 1956 அக்டோபரில் தியாகி சங்கரலிங்கனார் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் இருந்து உயிர் நீத்தார். 
 
Anna
1967-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரியணை ஏறியது. பேரறிஞர் அண்ணா முதல்வராக பதவி வகித்தார். அப்போது அதாவது 1967-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி முதல்வர் அண்ணாவே, தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கான தனி மசோதா கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றினார். 

தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18- ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என கொண்டாட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதனையே தமிழகமும் கடைபிடித்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு நாளை ஒட்டி “தமிழ்நாடு வாழ்க” என்று எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 
அதில், கடல் கண்டு, மலை கண்டு பயன்கொண்ட தமிழ்நாடு வாழ்க. களங்கண்டு, கலை கண்டு, கவி கொண்ட தமிழ்நாடு வாழ்க. உடல் கொண்டு, உரங்கொண்டு, உயிர் கொண்ட தமிழ்நாடு வாழ்க. ஜூலை 18, தமிழ்நாடு திருநாள் என்று சொல்லும்போதே நம் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒரு ஆற்றல் பிறக்கிறது. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க என குறிப்பிட்டுள்ளார்.