வீடு தேடி வரும் ரேசன் பொருட்கள்: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு..!
தமிழகத்தில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாக இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், இன்று இது குறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் வீடுகளுக்கே நேரடியாக சென்று நியாயவிலை பொருள்களை விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களில் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது போல், தமிழ்நாட்டிலும் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அதிகாரிகளை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஏற்கனவே புதுச்சேரியில், ரேஷன் கடை இல்லாத பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மட்டும் நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என புதுவை முதல்வர் ரங்கசாமி இன்று காலை அறிவித்துள்ளார். இதன் பின்னணியில், தமிழகத்திலும் அதே நாளில் இது போன்ற ஒரு அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran