வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 14 ஆகஸ்ட் 2024 (13:39 IST)

செந்தில் பாலாஜி வழக்கு.! ED-க்கு மேலும் ஒரு வாரம் அவகாசம்.! உயர்நீதிமன்றம்..!!

senthil balaji ed
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க வேண்டும் எனவும் மீண்டும் அவகாசம் கேட்கக் கூடாது எனவும் அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  
 
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில்,  கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
 
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, பதில் மனுத் தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 
 
இதையடுத்து, அவகாசம் வழங்கிய நீதிபதிகள் விசாரணையை ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, அன்றைய தினம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும், மீண்டும் அவகாசம் கேட்கக்கூடாது எனவும் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
 
Senthil Balaji
தீர்ப்பு ஒத்திவைப்பு:
 
இதனிடையே, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. ஜாமின் மனு நீதான விசாரணை முடிவடைந்து, இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.