வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 19 செப்டம்பர் 2024 (13:26 IST)

பிரபல அப்பு பிரியாணி கடைக்கு சீல்.! பிரியாணி அண்டாக்களை சாலையில் போட்டு போராட்டம்..!!

Appu BIryani
திருவேற்காடு அயனம்பாக்கத்தில் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல அப்பு பிரியாணி கடை சமையல் கூடத்திற்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். 
 
திருவேற்காடு அயனம்பாக்கத்தில் அப்பு என்பவர் தனது பெயரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.  இது தொடர்பாக சமூகவலைதளங்களில் ஏராளமான வீடியோக்களை அவர் பதிவு செய்ததால், அப்பு கடை பிரியாணியை சாப்பிட வாடிக்கையாளர்கள் படையெடுத்தனர்.
 
இதன் மூலம் சமூக வலைதளங்களில் அப்பு கடை பிரியாணி மிகவும் பிரபலமானது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் அப்பு கடையின் கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.  சமீபகாலமாக அப்பு கடையின் பிரியாணி, தரமற்ற முறையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. வாடிக்கையாளர்களும் அப்பு கடை பிரியாணி மீது அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
 
இந்நிலையில் திருவேற்காடு அயனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அப்பு பிரியாணி கடை சமையல் கூடத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுகாதாரமின்றி பிரியாணி சமைத்ததாக கூறி, சமையல் கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 

 
இதனால் ஆத்திரமடைந்த உரிமையாளர் அப்பு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பிரியாணி அண்டாக்களை சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.