சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 28 செப்டம்பர் 2024 (10:48 IST)

என்கவுண்டர் மரணங்கள் அடிப்படையிலேயே தவறானவை - ஆட்சி காலத்தை நினைவுபடுத்தும்.! நீதிபதி சாடல்...

Madurai Court
என்கவுன்டர் சம்பவங்களால் நீதித்துறை, அரசியலமைப்பு சட்ட உரிமைகள் மீதான நம்பிக்கை குறையும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
 
மதுரையைச் சேர்ந்த குருவம்மாள், 2010ஆம் ஆண்டு தனது மகன் முருகன் என்கவுன்டரில் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 
 
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, தற்போது குற்றவாளிகள் காவலர்களை தாக்க முயல்வதும், அதன்பிறகு அவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதும், சிலர் கை, கால்களை உடைத்துக் கொள்வதும் வழக்கமாகி வருகிறது என தெரிவித்தார்.
 
மேலும், என்கவுண்டர் மரணங்கள் அடிப்படையிலேயே தவறானவை என்பதை உணராமல் சிலர் இதனை பாராட்டுகின்றனர் என்றும் இதுபோன்ற சம்பவங்களின் உண்மையான பின்னணி அனைத்தும் ஒன்றுபோல் உள்ளதால் இதனை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
 
என்கவுன்டர் சம்பவங்களால் நீதித்துறை, அரசியலமைப்பு சட்ட உரிமைகள் மீதான நம்பிக்கை குறையும் என தெரிவித்த நீதிபதி, பிரிட்டீஷ் ஆட்சி காலத்தை இச்சம்பவங்கள் நினைவுபடுத்தும் என்று கூறினார். 
 
எந்தவொரு வழக்கும், தொடக்கம் முதல் முடிவு வரை சட்டப்படியே நடைபெற வேண்டும் என்றும் உடனடி மரணமே சரியான தண்டனை என்ற கோட்பாடு உண்மையானது அல்ல, அது ஒரு மாயை என்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி குறிப்பிட்டார்.

 
இந்த வழக்கில் காவல்துறையின் இறுதி அறிக்கையை ரத்து செய்த நீதிபதி, விசாரணையை நியாயமாகவும், முழுமையாகவும் நடத்தி 6 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தார்.