வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (17:34 IST)

கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்கக்கூடாது.! சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு அதிரடி உத்தரவு.!!

highcourt
சிதம்பரம் நடராஜர் கோயிலில் 6 கால பூஜை தவிர மற்ற நேரங்களில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்கக் கூடாது என பொது தீட்சிதர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   
 
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆணி திருமஞ்சன தரிசன விழா கடந்த ஜூலை மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. இதற்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்பந்தமூர்த்தி ராமன் என்பவரால் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அதில், ஆணி திருமஞ்சன திருவிழாவின் போது பக்தர்கள் கனக சபையில் ஏறி வழிபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தீட்சிதர்கள் அறிவித்துள்ளனர். 
 
இந்த தடையை நீக்கி பக்தர்கள் கனக சபையில் ஏறி வழிபட அனுமதிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது தீட்சிதர்கள் தரப்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. 
 
ஆறு கால பூஜை நேரத்தில் மட்டும் பக்தர்கள் கனகசபையில்  நின்று பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்படுவதில்லை  என கூறப்பட்டது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். ஆனால் விழாக்காலங்களில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்யத் தீட்சிதர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என தெரிவித்தார். 


இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், 6 கால பூஜை தவிர மற்ற நேரங்களில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்கக் கூடாது என தீட்சிதர்களுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தனர்.