திங்கள், 28 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2024 (09:19 IST)

வேட்டியை மடித்து சண்டையில் இறங்கிய பிராமணர்கள்.. வேடிக்கை பார்த்த மக்கள்! காஞ்சியில் வடகலை – தென்கலை மோதல்!

Vadakalai Thenkalai fight
காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் மீண்டும் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே மோதல் எழுந்த நிலையில் இரு பிரிவினரும் நடு ரோட்டில் சண்டையில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் புகழ்பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட வகையில் வடகலை – தென்கலை என இரு பிரமாணாள் பிரிவு மக்களும் வரதராஜ பெருமாள் கோவில் வைபவங்களில் கலந்து கொள்கின்றனர். இதில் வரதராஜ பெருமாள் கோவில் உற்சவ, ஊர்வல நிகழ்வுகளில் பிரபந்தம் பாட தங்களுக்கு உரிமை உள்ளதாக தென்கலை பிரிவினர் பல காலமாக கூறி வரும் நிலையில் வடகலை பிரிவினர் அது தங்களுக்கு பாத்தியப்பட்டது என கூறி வருகின்றனர்.

இதனால் அடிக்கடி இவர்களிடையே வாக்குவாதம், மோதல் எழுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளின் பார்வேட்டை உற்சவம் காலையில் நடைபெற்றது. சுவாமிகள் வீதி உலா நடைபெற்ற சமயம் வழக்கம்போல பிரபந்தம் பாடுவதில் வடகலை – தென்கலை பிரிவினரிடையே மோதல் எழுந்தது.


வாக்குவாதமாக தொடங்கிய இந்த சம்பவம் திடீரென கை கலப்பாக மாறியது. வடகலை – தென்கலை பிரிவினர் நடு ரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவத்தை கண்ட மக்கள் சிலர் அதை செல்போனில் வீடியோவாகவும் எடுக்க தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு எழுந்த நிலையில் அங்கு வந்த போலீஸார் இரு தரப்பினரையும் சமாதான படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K