வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (15:48 IST)

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் 15 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

Armstrong
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்  கைது செய்யப்பட்டவர்களில் மேலும் 15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  
 
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  இந்த கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பாஜக பிரமுகர் அஞ்சலை உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் என்பவர் ஜூலை 14ஆம் தேதி அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இவ்வழக்கில் தலைமறைவாக இருக்கும் முக்கிய ரவுடிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர். 

ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, அருள், ராமு மற்றும் திருமலை உள்ளிட்ட 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக ஹரிஹரன், மலர் கொடி, சதீஸ்குமார், விஜயகுமார், விக்னேஷ், அஸ்வத்தமன், பொற்கொடி, ராஜேஸ், குமார், செந்தில்குமார், கோபி என 15 பேர் மீது இன்று குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

 
இதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.