கன்னியாகுமரி ஆலயத்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழப்பு.. முதல்வரின் நிவாரண உதவி அறிவிப்பு..!
கன்னியாகுமரியில் புனித அந்தோனியார் ஆலய விழாவின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹5 லட்சம் நிவாரணம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், இனயம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் புனித அந்தோணியார் தேவாலய வருடாந்திர திருவிழா நடந்துவரும் நிலையில் மார்ச் 1 அன்று மாலையில் நடைபெற்ற தேர் பவனியில் அலங்காரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வைக்கப்பட்டிருந்த இரும்பு ஏணியை சாலையின் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி, இனயம் புத்தன்துறையைச் சேர்ந்த திருவாளர்கள் விஜயன் (வயது 52) த/பெ. தனிஸ்லாஸ், சோபன் (வயது 45) த/பெ. பெர்னின், மனு (வயது 42) த/பெ. ஒஸ்மான் மற்றும் ஜெஸ்டிஸ் த/பெ. விக்டர் (வயது 35) ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து இலட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
Edited by Siva