பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.. வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவு..!
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதிக்கு பின்னர் பிறந்தவர்கள் பாஸ்போர்ட் பெற வேண்டும் என்றால், அவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாஸ்போர்ட் சட்டம் 1980 விதிகளில் இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம். மேலும், நகராட்சி, மாநகராட்சி அல்லது அதற்கு நிகரான அமைப்புகள் வழங்கும் பிறப்பு சான்றிதழ் மட்டுமே ஆவணமாக ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில், 2023 அக்டோபர் 1 ஆம் தேதிக்கு முன்பு பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் தேவை இல்லை. பள்ளி சான்றிதழ், பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை இருந்தால் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் பிறப்புச் சான்றிதழ் இருக்காது என்பதால், இந்த திட்டம் நீண்ட நாட்களாக அமல்படுத்தப்படவில்லை. ஆனால், சட்டவிரோத குடியேறியர்களை தடுப்பதற்காக, இந்த திட்டம் தற்போது அவசியம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Edited by Siva