வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (13:26 IST)

சமவெளியில் சத்தமில்லாமல் சம்பாதிக்கும் ஜாதிக்காய்! ஜாதிக்காயின் அந்த ஜாலம் சொல்கிறது காவேரி கூக்குரல் கருத்தரங்கு!

Nutmeg plantation

சமவெளியில் மரவாசனைப் பயிர்கள் சாத்தியம் என்ற மாபெரும் கருத்தரங்கம், ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் தாராபுரத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மரவாசனைப் பயிர்களில் முக்கியமான ஒன்றாக ஜாதிக்காய் இருக்கிறது. இந்த கருத்தரங்கில் ஜாதிக்காய் சாகுபடி முதல் அதன் சந்தை வாய்ப்புகள் வரை பல்வேறு தகவல்கள் பகிர்ந்து கொள்ளபட இருக்கின்றன. சமவெளியில் ஜாதிக்காய் சாத்தியமா என்ற கேள்வியோடு, இது குறித்து தெரிந்து கொள்ள  அதனை சமவெளியில் பயிரிட்டு லட்சங்களில் லாபம் ஈட்டும் பொள்ளாச்சியை சேர்ந்த மருத்துவர் மூர்த்தி அவர்களை சந்தித்தோம்.

 

 

அவர் ஜாதிக்காய் மரங்கள், அதன் பராமரிப்பு, தட்பவெட்ப சூழல் மற்றும் விளைச்சல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நம்மிடம் விரிவாக பகிர்ந்து கொண்டார். மருத்துவர் என்பதாலோ என்னவோ மிகவும் தன்மையாகவும் மென்மையாகவும் பேசத் துவங்கினார். “என்னுடைய தோட்டம் ஆழியாரில் இருக்கிறது,  2021-ஆம் ஆண்டு முதல் இந்த தோட்டத்தினை நான் பராமரித்து வருகிறேன். 

 

எங்கள் தோட்டத்தில் 25 அடிக்கு ஒரு தென்னை மரம் நடவு செய்து இருக்கிறோம். இதில் நான்கு தென்னை மரங்களுக்கு நடுவில் ஒரு ஜாதிக்காய் மரம் நட்டு இருக்கிறோம். மொத்தம் 350 தென்னை மரங்களும், இதற்கு இடையே 252 ஜாதிக்காய் மரங்களும் இருக்கின்றது. மேலும் 500 முட்கள் 600 பாக்கு மரங்களும் இதனிடையே இருக்கின்றது. அதே போன்று ஒவ்வொரு தென்னை மரத்திற்கும் 2 அல்லது 3 சிறுமிளகு கொடி ஏற்றி விட்டு இருக்கிறோம்.

 

செயற்கை உரங்கள் இல்லாமல் மரங்களை பராமரிக்க முடிகிறதா என்று நாம் கேட்ட போது, யூரியா, டிஏபி போன்ற எந்த செயற்கை உரங்களும் இல்லாமல் மாட்டு சாணி, வேப்ப புண்ணாக்கு போன்ற இயற்கை உரங்கள் மட்டுமே பயனபடுத்தி வருகிறோம். ஜாதிக்காய் வருடம் கூட, கூட காய்ப்பு அதிகமாகி கொண்டே போகிறது, உதாரணமாக இரண்டாம் வருடத்தை விட மூன்றாம் வருடம் அதிக காய்ப்பு கிடைத்து இருகின்றது. இயற்கை முறையில் பராமரிப்பு செய்வதால் காய்ப்பு குறையவில்லை என்று தான் கூற வேண்டும் எனக் கூறினார். 

 

மேலும் ஜாதிக்காய் மற்றும் அது சார்ந்த பொருட்கள் மூலம் கிடைக்கும் வருவாய் குறித்து அவர் கூறுகையில்  “நடவு செய்த நான்காவது வருடத்தில் ரூ. 80,000/- வருவாய் கிடைத்தது, ஆனால் கடந்த வருடம் அதாவது 15-ஆவது வருடத்தில் ரூ. 8 லட்சம் வரை வருவாய்  கிடைத்துள்ளது. பொள்ளாச்சியில் உள்ள ஜாதிக்காய் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலமே நாங்கள் விற்பனை செய்து வருகிறோம். 

 

ஜாதிக்காய் கொட்டை கிலோ ரூ.250 முதல் ரூ.500 வரை எடுத்துக் கொள்கிறார்கள். ஜாதி பத்திரியை பொறுத்த வரையில் நல்ல தரமாக மஞ்சள் நிறத்தில் இருந்தால்  கிலோ ரூ. 2,000 முதல் ரூ. 2,500 வரை கிடைக்கிறது. கடந்த ஆண்டு வெப்பம் 18 டிகிரி முதல் 42 டிகிரி வரை சென்றது, ஆனால் ஜாதிக்காய் மரங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருகின்றன. இந்த மரங்களுக்கு நிழல் தேவைப்படுகிறது, குறிப்பாக பாதி நிழலில் இருக்கும் மரங்கள் நன்றாகவே இருக்கின்றன. 

 

இந்த ஜாதிக்காய் மரத்தில் இருந்து வரும் பொருட்களைக் கொண்டு மாத்திரைகள் தாயரிக்கப்படுகின்றன, மசாலா பொருளாக உணவில் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்த படுகின்றது. பலர் இந்த ஜாதிக்காய், மிளகு போன்ற பயிர்கள் மலைகளில் மட்டுமே விளையும் என்று நம்பிக் கொண்டு இருக்கிரார்கள். ஆனால் என்னுடைய நிலம் சமவெளி தான். ஆகையால் சமவெளியில் ஜாதிக்காய் சாகுபடி சாத்தியம் என்று உறுதிபட கூறினார். 

 

ஈஷா அவுட்ரீச் சார்பில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி திருப்பூர் தாராபுரத்தில் “சமவெளியில் மர வாசனைப் பயிர்கள் சாத்தியமே” எனும் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. அதில் மருத்துவர் மூர்த்தி போன்ற ஜாதிக்காய் சாகுபடி மூலம் பல லட்சங்கள் ஈட்டும் முன்னோடி வெற்றி விவசாயிகள் பலர் பங்கேற்க உள்ளனர். மேலும் வேளாண் வல்லுனர்கள் மற்றும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் என பல அறிஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனுள்ள பல்வேறு தகவல்களை பகிர உள்ளனர். 

 

இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90079 / 94425 90081 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.