செவ்வாய், 17 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2024 (12:51 IST)

சென்னை மெட்ரோ திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதியில்லை.. முதல்வர் கோரிக்கை விடுத்தும் ஏமாற்றம்..!

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தாம்பரம் - செங்கல்பட்டு விரைவுச் சாலை திட்ட ஒப்புதல், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடந்த 21ஆம் தேதி மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்கும் அம்சங்கள் என தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
 
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி,  தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்க வேண்டும்.
 
பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டும். கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல் அளிக்க வேண்டும்.
 
தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்,  கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்து வேண்டும் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
 
இருப்பினும் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ திட்டம் உள்பட எதிர்பார்த்த பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
 
Edited by Siva