இந்தியா ஏ அணியுடன் இங்கிலாந்து செல்லும் கம்பீர்… காரணம் என்ன?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இரு தினங்களுக்கு முன்னர் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில், இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் 12 ஆண்டுகள் கழித்து சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை இந்திய அணி வென்றது. இதன் மூலம் மூன்று முறை சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது இந்திய அணி.
இந்திய அணி சாம்பியன் கோப்பையை வென்றாலும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதில் முக்கியமான ஒன்று “இந்திய அணி இந்த தொடர் முழுவதும் ஒரே மைதானத்தில் விளையாடியது” என்பதுதான். குறிப்பாக இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் இந்த விமர்சனத்தை இந்திய அணியின் மேல் வைத்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்து ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளதால் இந்திய அணிப் பயிற்சியாளர் கம்பீருக்கு 2 மாதங்கள் ஓய்வு கிடைத்துள்ளது. ஆனால் அந்த ஓய்வை அவர் இங்கிலாந்தில் இந்திய ஏ அணியுடன் செலவிட உள்ளார். ஜூன், ஜூலை மாதத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் அதற்கான முன் தயாரிப்பாகக் கம்பீர் இந்த முடிவை எடுக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.