நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஒரு முன்னாள் சாம்பியனான இத்தாலியும் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.
இன்று நடைபெற்ற ஓர் ஆட்டத்தில் உருகுவே அணி இத்தாலி அணியை 1-0 எனும் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய போட்டிக்கு முன்னேறியது.
இரு அணிகளுக்குமே இந்தப் போட்டி மிகவும் முக்கியமானதாக இருந்தது. புள்ளிகள் கணக்கில் இரு அணிகளுமே மூன்று புள்ளிகள் பெற்றிருந்தாலும், கோல்கள் வித்தியாசத்தில் இத்தாலி அணி சாதகமான நிலையில் இருந்தது.
வென்றே ஆக வேண்டும் எனும் நிலையில் உருகுவேயும், ஆட்டம் சமநிலையில் முடிந்தால்கூட அடுத்த சுற்றுக்கு முன்னேறும் நிலையில் இத்தாலியும் இருந்தன.
மிகவும் கடுமையாக நடைபெற்ற இந்தப் போட்டியின் 81 ஆவது நிமிடத்தில் கோடின் ஒரு கோல் அடித்து தமது அணியை முன்னணிக்கு எடுத்துச் சென்றார்.
ஆட்டத்தை சமன் செய்ய இத்தாலி எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து 1-0 எனும் கணக்கில் வென்ற உருகுவே அடுத்த சுற்றுக்கு முன்னேறியது, இத்தாலி அணியோ போட்டியிலிருந்து வெளியேறியது.
இங்கிலாந்து கடைசி ஆட்டத்திலும் வெற்றி இல்லை
இதனிடையே இங்கிலாந்து அணியால் தனது கடைசி குழுநிலை ஆட்டத்திலும் வெற்றிபெற முடியவில்லை.
கோஸ்ட்டாரிக்கா அணிக்கு எதிரான அவர்கள் ஆடிய ஆட்டம் எத்தரப்புக்கு வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.
கோஸ்ட்டாரிக்கா ஏற்கெனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஒன்பது வீரர்களை மாற்றியது.