1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 18 மே 2022 (12:01 IST)

காற்று மாசுபாடு; ஆண்டுக்கு 90 லட்சம் உயிரிழப்பு! – அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

உலகம் முழுவதும் காற்று மாசுபாடால் ஆண்டுதோறும் 90 லட்சம் மக்கள் இறப்பதாக வெளியாகியுள்ள ஆய்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் தற்போதைய நவீன காலக்கட்டத்தில் காற்று மாசுபாடு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சமீப காலங்களில் அதிகரித்துள்ள வாகனங்களின் பயன்பாடு காரணமாக ஏற்படும் புகை, தொழிற்சாலை புகை என நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.

காற்று மாசுபாடால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவை சேர்ந்த தி லான்செட் பிளானட்டரி ஹெல்த் இதழ் சார்பில் நடத்தப்பட்ட காற்று மாசு குறித்த ஆய்வில் உலக அளவில் காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 90 லட்சம் பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த 2000ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 55 சதவீதம் உயர்ந்துள்ளது. வங்கதேசம் மற்றும் எத்தியோப்பிய நாடுகளில் காற்று மாசால் ஒரு ஆண்டில் மட்டும் 1,42,883 பேர் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசால் உயிரிழப்பு அதிகம் ஏற்படும் நாடுகளில் மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் உள்ளன. அதே சமயம் புருனே, கத்தார் மற்றும் ஐஸ்லாந்து ஆகியவை குறைந்த காற்று மாசு இறப்பு விகிதங்களை கொண்டுள்ளன.