இங்கிலாந்தில் குப்பையில் கண்டெடுக்கப்பட்ட புத்தகம் ஒன்று பல லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் அரியவகை புத்தகங்கள், பொருட்கள் மீது பொதுவாகவே மக்கள் ஆர்வம் காட்டுவது அதிகம். இதனால் அங்கு பல ஏல நிறுவனங்களும் கூட செயல்பட்டு வருகின்றன. யாராவது ஒருவர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினர் ஏல நிறுவனங்களை தொடர்பு கொண்டு அவர் சேகரித்த பொருட்களின் மதிப்பை உணர்ந்தவர்களிடம் அதை ஏலத்தில் விற்கிறார்கள்.
சமீபத்தில் ப்ரிக்ஸாம் பகுதியை சேர்ந்த டேனியல் பியர்ஸ் என்பவரது ஏல நிறுவனத்திற்கு அவ்வாறு உடல்நலக் குறைவால் இறந்த ஒருவரது உடைமைகளை ஏலத்தில் விடுவதற்கான அழைப்பு வந்துள்ளது. இறந்தவரின் பொருட்கள் குப்பை போல குவிந்து கிடந்த நிலையில் அதில் ஒரு புத்தகத்தை டேனியல் பியர்ஸ் பார்த்துள்ளார்.
தற்போது உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஹாரிபாட்டர் புத்தகத்தின் முதல் பதிப்பு அது. ஜே.கே.ரோலிங் எழுதிய இந்த முதல் புத்தகம் மொத்தமே 500 பிரதிகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டது. அதில் 300 பிரதிகள் லண்டன் நூலகங்களில் உள்ளது. முதல் பிரதியில் அட்டையின் பின் பக்கத்தில் எழுத்து பிழைகள் இருக்கும். அதை வைத்து அது முதல் பிரதி என்பதை கண்டறிந்த பியர்ஸ் அதை ஏலத்தில் விட்டுள்ளார்.
ஹாரிபாட்டர் ரசிகர்கள் அதை போட்டிப்போட்டு ஏலத்தில் எடுக்க இறுதியில் அது இந்திய மதிப்பில் ரூ.22 லட்சத்திற்கு ஏலத்தில் விற்பனையானது. இதனால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
Edit by Prasanth.K