சுனிதா வில்லியம்ஸ்க்கு சொந்த பணத்தில் சம்பளம்.. ட்ரம்ப் அறிவிப்பு..!
சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்கு மேலாக விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவித்தார். ஆனால், அவர் வெற்றிகரமாக கடந்த 19ஆம் தேதி பூமிக்கு அழைத்துவரப்பட்டார்.
எட்டு நாள் பயணம் என்ற திட்டத்துடன் சென்றவர்கள், 286 நாட்கள் அங்கேயே தங்கி இருந்தனர். இதனால், கூடுதலாக 278 நாட்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், நாசாவை பொருத்தவரை கூடுதல் சம்பளம் என்பது விதிமுறைகளில் இடமில்லை என்று கூறப்பட்டது.
இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுகுறித்து கருத்து தெரிவித்தபோது, "நான் எனது சொந்த பணத்தில் சுனிதா வில்லியம்ஸ்க்கு சம்பளம் கொடுப்பேன்" என்று கூறியுள்ளார். மேலும், "சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மூர் ஆகிய இருவரையும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வந்த எலான் மஸ்க் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
விண்வெளியில் கூடுதல் காலம் இருந்த சுனிதா வில்லியம்ஸ் உட்பட இரண்டு பேருக்கு தினமும் 5 டாலர்கள் சிறப்பு சம்பளமாக வழங்கப்படும் என்றும், அதை தனது சொந்த பணத்தில் வழங்குவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Edited by Siva