வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 நவம்பர் 2022 (09:22 IST)

தீயணைப்பு வாகனத்தில் மோதி பற்றி எரிந்த விமானம்! சதியா? – பெருவில் பரபரப்பு!

Flight
பெரு நாட்டில் விமானம் ஓடுதளத்தில் சென்றபோது தீயணைப்பு வாகனத்தில் மோதி தீப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் ஜார்ஜ் சாவேஸ் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து நேற்று முன் தினம் தனியார் நிறுவன விமானம் ஒன்று 102 பயணிகள் மற்றும் 6 பயணிகள் என மொத்தம் 108 பயணிகளுடன் புறப்பட்டது.

விமானம் ஓடுபாதையில் பறப்பதற்காக அதிவேகத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது ஓடுபாதையில் திடீரென தீயணைப்பு வாகனம் ஒன்று நுழைந்தது. அந்த வாகனம் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் உராய்ந்தபடி வேகமாக சென்றதால் தீப்பிடித்தது.


விமானத்தின் அடிபாகம் தீப்பற்றியதால் விமான பயணிகள் மரண பயத்தில் அலறியுள்ளனர். உடனடியாக அங்கு விரைந்த மற்ற தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக தீயை அணைத்து பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் 20 பயணிகள் படுகாயமடைந்துள்ள நிலையில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விமானத்தின் மீது மோதிய வாகனத்தில் இருந்த தீயணைப்பு வீரர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து திட்டமிட்ட சதியா என்று விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit By Prasanth.K