வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2019 (22:25 IST)

சிந்து நதி தண்ணீரை திசைமாற்றினால்.... இந்தியாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை

ஹரியாணா மாநிலத்தில் வரும் 21ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதை அடுத்து இந்த மாநிலத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி சமீபத்தில் பங்கேற்று பேசியபோது, ‘கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவுக்குச் சொந்தமான நீர், ஹரியாணா விவசாயிகளுக்குச் சொந்தமான நீர், பாகிஸ்தான் பக்கம் பாய்கிறது. இந்த நீரை மோடியாகிய நான் தடுத்து நிறுத்தி, உங்களுடைய நிலங்களுக்கும், வீடுகளுக்கும் கொண்டுவருவேன்’ என்று கூறினார்.
 
இந்த நிலையில் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் நதி நீரைத் தடுப்போம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளது தவறானது ஆகும்.
 
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி மேற்கு நோக்கிப் பாயும் மூன்று நதிகள் மீது எங்களுக்கு முழுமையான உரிமை இருக்கிறது. அந்த நதி நீரை திசை மாற்றவோ அல்லது தடுக்கவோ இந்தியா முயன்றால் அது ஆக்கிரமிப்பாகவே கருதப்படும். அதற்குப் பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு உரிமை இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
 
பாகிஸ்தானின் இந்த எச்சரிக்கைக்கு பிரதமர் மோடி என்ன பதிலடி கொடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்