1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 டிசம்பர் 2021 (12:01 IST)

மறைந்து சென்ற வெளிநாட்டினர்; விபத்துக்குள்ளான ட்ரக்! – மெக்சிகோவில் சோகம்!

மெக்சிகோவில் வெளிநாட்டினர் மறைந்து சென்ற ட்ரக் விபத்துக்கு உள்ளானதில் 49 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவிலிருந்து ஆண்டுதோறும் மக்கள் பலர் வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அமெரிக்காவிற்குள் அகதிகளாக நுழைகின்றனர். அதுபோல மெக்சிகோவுக்கு தெற்கே உள்ள குவாதமாலா போன்ற குட்டி நாடுகளில் இருந்தும் மக்கள் பலர் மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் நுழைய முயல்கின்றனர்.

இந்நிலையில் தெற்கு மெக்சிகோவில் சியாபாஸ் நகரை நோக்கி சென்ற ட்ரக் ஒன்று நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. இந்த ட்ரக்கிற்குள் அனுமதியின்றி மெக்சிகோவிற்குள் அகதியாக நுழைந்த 107 பேர் பயணித்துள்ளனர். ட்ரக் கவிழ்ந்த விபத்தில் 49 பேர் உயிரிழந்த நிலையில் 40 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பி பிழைத்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் குவாதமாலாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.