2 ஆயிரம் யு.எஸ்.எய்டு ஊழியர்கள் பணிநீக்கம்.. மீதமுள்ளவர்களுக்கு கட்டாய விடுப்பு: டிரம்ப் உத்தரவு..
2000 யு.எஸ்.எய்டு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ளவர்களில் முக்கிய அதிகாரிகளை தவிர மற்ற அனைவரும் கட்டாய விடுப்பில் செல்ல அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து செலவினங்களை குறைக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்தியா உட்பட வெளிநாடுகளுக்கு வழங்கி வந்த நிதி உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதும் தெரிந்துள்ளது.
இந்த நிலையில், ஏற்கனவே அரசு ஊழியர்கள் தாங்களாகவே ராஜினாமா செய்தால் எட்டு மாத சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது, அடுத்த கட்டமாக, அமெரிக்க சர்வதேச மேம்பாடு நிறுவனம் (USAID) என்ற அமைப்பில் உள்ள 2000 பதவிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் 2000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, முக்கிய பதவிகளில் உள்ள சிலரை தவிர மற்ற அனைவரும் விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது, அரசு ஊழியர்கள் மற்றும் யு.எஸ்.எய்டு போன்ற சில அமைப்புகளுக்கு அதிர்ச்சியை அளித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Edited by Mahendran