1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 22 டிசம்பர் 2021 (14:52 IST)

4வது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் முதல் நாடாகும் இஸ்ரேல்!!

இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட் தாமதிக்காமல் உடனே அனைவரும் 4வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.  

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் மற்றுமொரு திரிபான ஒமிக்ரான் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. பல நாடுகளில் இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டுள்ளன. ஒமிக்ரான் பரவலை ஏற்கனவே செலுத்திய தடுப்பூசிகள் தடுக்குமா என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன.
 
இந்நிலையில் இஸ்ரேலில் முதல் ஒமிக்ரான் பலி ஏற்பட்டுள்ளது. இறந்த 60 வயது நபர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஒமிக்ரான் உறுதி ஆகியிருந்தாலும், அவருக்கு இணை நோய்களும் இருந்ததால் ஒமிக்ரானால் இறந்தார் என உறுதியாக சொல்ல முடியாது என இஸ்ரேல் மருத்துவமனை தெரிவித்தது. 
இந்த மரணத்திற்கு பின்னர் இஸ்ரேல் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு 4வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் 2 டோஸ் தடுப்பூசியை முன்கூட்டியே முடித்து 3 வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியையும் போட்டுவிட்டது. 
 
இதனால் தற்போது ஒமிக்ரான் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு  4வது டோஸ் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிரதமர் நஃப்தாலி பென்னட் தாமதிக்காமல் உடனே அனைவரும் 4வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். 
 
இதன் மூலம் 4வது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் முதல் நாடாக இஸ்ரேல் உருவெடுக்க உள்ளது.