வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 18 மே 2021 (01:23 IST)

இஸ்ரேல்-காசா மோதல்: சமூக ஊடகங்களில் வலம் வரும் போலிச் செய்திகளும் உண்மையும்

காசாவில் இஸ்ரேல் ராணுவத்தால் தாக்கப்பட்ட கட்டடத்தின் இடிபாடுகள்
 
இஸ்ரேல்-பாலத்தீன மோதல் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான பல போலி செய்திகள் சமூக வலைத் தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
 
இருதரப்பிலும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ள சில தகவல்களை நாம் பரிசோதித்தோம்.
 
ராக்கெட் தாக்குதல் - சிரியாவிலிருந்து வந்தது காசாவிலிருந்து அல்ல
பட மூலாதாரம்,YOU TUBE
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் செய்தி தொடர்பாளர் ஒருவர், டிவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டு, "அதிக நெரிசல்" மிகுந்த பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் செலுத்திய ராக்கெட்டுகள் அவை என தெரிவித்திருந்தார்.
 
"இந்த 250க்கும் அதிகமான ராக்கெட்டுகளில் மூன்றில் ஒரு பங்கு காசாவிற்குள்ளேயே விழுந்து பாலத்தீனர்களை கொன்றுள்ளது," என அவர் பதிவிட்டிருந்தார்.
 
ஆனால் அந்த வீடியோ பழைய வீடியோ. அது சிரியாவில் எடுக்கப்பட்ட வீடியோ. காசாவிலிருந்து அல்ல.
 
2018ஆம் ஆண்டு கிளர்ச்சி குழு ஒன்றுக்கு எதிராக சிரியா அரசு நடத்திய தாக்குதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ அது.
 
`இஸ்ரேலிய படைகளின்` வைரல் ட்வீட்டுகள் போலியானவை
இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் பதிவு என பலர் சமூக வலைதளங்களில் பதியும் அந்த ஸ்கீரின் ஷாட்டில், "எங்களுக்கு கொல்வது மிகவும் பிடிக்கும்" மற்றும் "இப்போதுதான் குழந்தைகள் மீது குண்டு வீசினோம்" போன்ற வாசகங்கள் உள்ளன.
 
ஆனால் இந்த ஸ்கீரின் ஷாட்டுகள் போலியானவை. இதை இணையத்தில் இருக்கும் டூல்கள் கொண்டு எளிதாக உருவாக்கலாம்.
 
இஸ்ரேல் - பாலத்தீன சண்டை: இந்தியா ஆதரிப்பது யாரை?
காசாவில் வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் இருந்த கட்டடத்தை தகர்த்த இஸ்ரேல்
இஸ்ரேல் - பாலத்தீனம்: புதிய சண்டைகளுக்கு வித்திடும் பழைய சிக்கல்கள்
இம்மாதிரியான செய்தியை இஸ்ரேலிய பாதுகாப்பு படை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலோ, வேறு எங்குமோ பதிவிடவில்லை.
 
இந்த பதிவுகள் உருவான ட்விட்டர் கணக்குகளை பார்த்தால், அது பாலத்தீனத்திற்கு ஆதரவான கணக்காகவும், இஸ்ரேலுக்கு எதிரானதாகவும் தெரிகிறது. மேலும் அது கேலி செய்திகளை பதிவிடும் தளமாகக் கூறப்பட்டுள்ளது.
 
இந்த வீடியோ காசாவில் நட்க்கும் `போலி இறுதிச் சடங்கை` காட்டவில்லை
 
இஸ்ரேலை சேர்ந்த சமூக ஊடக பயனர்கள் சிலர், வீடியோ ஒன்றை பகிர்ந்து அதில் பாலத்தீனர்கள் இஸ்ரேல் வான் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவரின் இறுதிச் சடங்கு போல சித்தரிப்பதற்காக போலி ஏற்பாடுகளை செய்ததாக பதிவிட்டிருந்தனர். உலகின் அனுதாபத்தை பெற அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
 
இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகத்தின் ஆலோசகரும் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் சில பதின்ம வயது ஆண்கள், தங்களின் தோள்களில் இறந்தவர் ஒருவரை தூக்கி செல்வர்.
 
அப்போது சைரன் ஒலி கேட்டதும், அவர்கள் அந்த உடலை போட்டுவிட்டு ஓடிவிடுவர். பிறகு அந்த `உடலும்` எழுந்து ஓடி விடும்.
 
இந்த வீடியோ 2020ஆம் ஆண்டு மார்ச் மாதமும் பதிவிடப்பட்டிருந்ததை நாங்கள் கண்டோம். அந்த சமயம் வந்த செய்தியில் ஜோர்டானில் சில பதின்ம வயது ஆண்கள் கடுமையான கோவிட் கட்டுப்பாட்டை தவிர்க்க இம்மாதிரியாக திட்டமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த வீடியோ "பாலிவுட்(palywood)" (அதாவது ஹாலிவுட், பாலத்தீனம் என்ற இரண்டு சொற்களையும் இணைத்து) என்ற ஹாஷ்டாகுடன் பதிவிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் ஆதரவாளர்களால் இது பலமுறை பகிரப்பட்டுள்ளது.
 
விடியோ அல் அக்சா மசூதி எரிவதை காட்டவில்லை
 
பாலத்தீனத்திற்கு ஆதரவான சிலர் இந்த வீடியோவை பகிர்ந்து கிழக்கு ஜெருசலேத்தில் உள்ள மசூதியில் தீ. `இஸ்ரேல் இந்த அல்-அக்சா மசூதியை எரிய விடுகிறது` என்று குற்றம் சுமத்தியிருந்தனர்.
 
இஸ்ரேல் - காசா: தீவிரமாகும் மோதலால் போர் மூளும் அச்சத்தில் மக்கள்
இஸ்ரேலுக்கு தலைவலி தரும் ஹமாஸ்: காசாவை ஆளும் ஆயுதக் குழுவின் வரலாறு
இந்த வீடியோ உண்மைதான். ஆனால் வேறு கோணத்திலிருந்து எடுக்கப்பட்ட அதே வீடியோவில் மசூதியின் அருகில் இருக்கும் மரம் தீப்பிடித்திருப்பது தெரிகிறது. மசூதி அல்ல.
 
ஜெருசலேத்தின் பழைய நகரத்தில் இருக்கும் அந்த மசூதி இஸ்லாமியர்களால் புனிதமாக கருதப்படுகிறது. ஆனால் டெம்பிள் மவுண்ட் என்ற அதே இடம் யூதர்களுக்கும் புனித்தலமாக கருதப்படுகிறது.
 
அந்த வீடியோவில் இளம் இஸ்ரேலிய யூதர் கூட்டம் பாலத்தீனத்துக்கு எதிரான பாடல்களை பாடுவதை கேட்க முடிகிறது. அதில் நெருப்பு தூரத்தில் தெரிகிறது.
 
 
ஆனால் தீப்பிடித்ததற்கான காரணத்தை தெரிந்து கொள்வது சிக்கலானதாக உள்ளது.
 
பாலத்தீன வழிபாட்டாளர்கள் தூக்கி எறிந்த பாட்டாசுகளால் அங்கு தீப்படித்ததாக இஸ்ரேலிய காவல்துறையின் தெரிவிக்கின்றனர். ஆனால் இஸ்ரேலிய அதிகாரிகளால் எறியப்பட்ட குண்டுகளால்தான் தீ ஏற்பட்டதாக பாலத்தீன மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
ராயட்டர்ஸ் செய்தியில் அந்த மரம் மசூதியிலிருந்து வெறும் 10 மீட்டர் தொலைவில்தான் உள்ளது என்றும், தீ அணைக்கப்பட்டது என்றும் மசூதிக்கு எந்த சேதாரமும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 
பலரால் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில் பாலத்தீனத்தை சேர்ந்த போராளிக் குழுவான ஹமாஸ், காசாவின் தெரு ஒன்றில் ஏவுகணையை எடுத்து செல்வதாக சித்தரிக்கப்படுகிறது. குழந்தை ஒன்று பேசுவதும் அந்த வீடியோவில் கேட்கிறது.
 
அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் ஆதரவு சமூக ஊடக கணக்கின் பதிவு ஒன்றில், "இஸ்ரேல், மனிதர்களை காயப்படுத்துவதற்கு தயங்கும் என்பதால், ஹமாஸ் குழுவினர் மீண்டும் ஒருமுறை யூதர்களை கொல்வதற்கு மனிதர்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர்." என கூறப்பட்டுள்ளது.
 
இருப்பினும் இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் தேதி இஸ்ரேலில் உள்ள அபு ஸ்னான் என்ற இடத்திலிருந்து எடுக்கப்பட்டதாக பகிரப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைக்காக பயன்படுத்தக்கூடிய ஒருவகை ஏவுகணை இது என பெரிங்கேட் என்னும் செய்தி சரிபார்க்கும் தளத்தின் ஆராய்ச்சியாளர் அரிக் டோலர் தெரிவிக்கிறார்.
 
மேலும் டிவிட்டரில் இந்த பதிவை இட்ட கணக்கில் இந்தப் பதிவை அழித்துவிட்டு `தவறான தரவு` என மன்னிப்பு கோரப்பட்டது.
 
செய்தி சேகரிப்பு அலிஸ்டெர் கோல்மேன், ஷ்யான் சர்தாரிசாதே, கிறிஸ்டோஃபர் கில்ஸ், நடேர் இப்ராகிம்