1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 30 மார்ச் 2021 (11:20 IST)

தபால் வாக்கை பேஸ்புக்கில் ஷேர் செய்த விவகாரம்! – ஆசிரியை உட்பட மூன்று பேர் கைது!

தென்காசியில் தபால் வாக்கு செலுத்தியதை சமூக வலைதளங்களில் பதிவிட்ட விவகாரத்தில் ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னதாக தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தென்காசி ஆசிரியை ஒருவர் அமமுகவுக்கு ஓட்டுப் போட்டதாக தபால் வாக்கு சீட்டு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணையில் ஆசிரியை ஆரோக்ய அனுஷ்டால் என்பவர் பணியிடை நீக்க செய்யப்பட்ட நிலையில், தனக்கும் அந்த தபால் ஓட்டுக்கும் சம்பந்தமில்லை என அவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

விரிவான விசாரணையில் தபால் ஓட்டு புகைப்படத்தை பதிவிட்டது மற்றொறு பள்ளி ஆசிரியை கிருஷ்ணவேணி என தெரியவந்துள்ளது. தபால் ஓட்டு புகைப்படத்தை கிருஷ்ணவேணி அவர் கணவருக்கு அனுப்ப, அவர் அமமுக அனுதாபி நண்பர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார். இப்படியாக அது சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இதுத்தொடர்பாக ஆசிரியை கிருஷ்ணவேணி, அவரது கணவர், அமமுக அனுதாபி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தவறாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியை குறித்து விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.