1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : திங்கள், 20 மே 2024 (11:22 IST)

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

நேற்று ஈரான் அதிபர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் தற்போது வரை அவரது நிலை என்ன என்று தெரியாமல் இருக்கும் நிலையில் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி என்பவர் நேற்று ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தபோது அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியதாகவும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஆனால் கடும் பனிப்பொழிவு பெய்து வருவதை எடுத்து மீட்பு படை மிகவும் மந்தமாக நடைபெறுவதாக கூறப்படும் நிலையில் விபத்தில் சிக்கிய அதிபர் ரெய்சி உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றும் 17 மணி நேர தேடலுக்கு பிறகு தற்போது தான் ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஹெலிகாப்டர் முழுவதும் தீயில் உருக்குலைந்து காட்சி அளிக்கிறது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன .
 
இதன் காரணமாக விபத்தில் சிக்கியவர்கள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என்று ஈரான் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஹெலிகாப்டர் மலை மீது மோதி முழுவதுமாக உருக்குலைந்து உள்ளது என்றும் ட்ரோன் மூலம் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் அடையாளம் காணப்பட்டு தற்போது செஞ்சிலுவை சங்கத்தினர் உதவியுடன் மீட்புபணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran