வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019 (19:31 IST)

பாசிச, இந்து மேலாதிக்க மோடி அரசு: இம்ரான்கான் கடுமையான விமர்சனம்

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது முதல் இந்தியாவின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வரும் பாகிஸ்தான், தற்போது பிரதமர் மோடியின் அரசை பாசிச, இந்து மேலாதிக்க அரசு என கடுமையாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பாஜகவை விமர்சிப்பது போலவே பாகிஸ்தான் பிரதமரும் விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது டுவீட்டில், 'பாசிச, இந்து மேலாதிக்க மோடி அரசின் ஆட்சியின் கீழ் இருக்கும் இந்தியாவின் அணு ஆயுத பாதுகாப்பு பற்றி உலகம் பொறுப்புடன் கவனம் மேற்கொள்ளவேண்டும்' என்று ஒரு டுவீட்டிலும், இது குறிப்பிட்ட பிராந்தியத்துக்கான பிரச்னை மட்டுமல்ல. உலகம் முழுதிற்குமே தாக்கம் ஏற்படுத்தக் கூடியது” என்று தெரிவித்துள்ளார். மேலும், ``ஏற்கெனவே 40 லட்சம் முஸ்லீம்கள் கைது முகாம்களையும், குடியுரிமை ரத்தையும் எதிர்கொள்ள உள்ளனர். ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வெறிபிடித்து அலைகின்றனர். சர்வதேச நாடுகள் இப்போதே தலையிடவில்லையெனில் இது பரவும்” என மற்றொரு டுவிட்டிலும் தெரிவித்துள்ளார்.
 
 
முன்னதாக சமீபத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையில் மாற்றம் வரலாம். எதிர்காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அணுக் கொள்கையில் மாற்றங்கள் வரலாம்" என்று பேசியிருந்ததற்கு எதிர்வினையாகவே பாகிஸ்தான் பிரதமரின் இந்த டுவீட் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது