1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2023 (11:45 IST)

கடலில் பிறந்து கடலிலேயே வாழும் மனிதர்கள்! பஜாவோ இனம் பற்றி தெரியுமா?

Bajau Trobes
மனித இனமே நிலத்தில் பிறந்து பண்பாடு அடைந்த இனம்தான். ஆனால் இப்போதும் நிலத்தை பார்க்காமல் கடலிலேயே பிறந்து, வாழ்ந்து, இறந்து வரும் ஒரு இனக்குழு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?



மலேசியா, இந்தோனேசியா, ப்ரூனே இடையேயான கடல் பகுதியில் வாழும் ஒரு பழங்குடி இனம்தான் பாஜாவோ இனம். பழங்குடி மக்களான இவர்கள் தங்கள் வாழ்நாளில் நிலத்தில் கால் வைப்பதே அரிது. படகுகள், கடலில் அமைக்கப்படும் மர வீடுகளில் வசிக்கும் அவர்களது அன்றாட உணவே கடல் உயிரினங்கள்தான். மேற்கு இந்தோனேசிய தீவுகளான மாலுகு, ராஜா அம்பட், சுலாவ்சி ஆகியவற்றிற்கு இடையே உள்ள கடல் பகுதியில் வசிக்கும் இவர்களுக்கு படகுகள்தான் போக்குவரத்து சாதனம்.

மற்றவர்களை போல ஸ்கூபா டைவிங்கிற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் எல்லாம் இவர்களுக்கு தேவையே இல்லை. அப்படியே தண்ணீரில் குதித்து நீண்ட நேரம் கடல் ஆழம் வரை சென்று வருவார்கள். அந்த அளவுக்கு கடலோடு ஒன்றிய வாழ்க்கை இவர்களுடையது. மீன், ஆக்டோபஸ், இறால், நண்டு என கடல் உணவுகள் அனைத்தும் இவர்களது உணவு.

Bajau Trobes


ஆனால் இந்த மக்களுக்கு இதுவரை எந்த நாட்டின் குடியுரிமையும் அளிக்கப்படவில்லை. மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் என பல நாடுகள் அருகில் இருந்தாலும் இவர்களை தங்கள் நாட்டு குடிமக்களாக எந்த நாடும் அறிவிக்கவில்லை. எந்த நாடும் அற்ற இந்த மக்கள் கடலையே தங்கள் நாடாக கொண்டு அதில் பிறந்து அதிலேயே வாழ்ந்து அதிலேயே மடிந்தும் போகிறார்கள்.

Edit by Prasanth.K