வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 14 ஜூலை 2016 (19:00 IST)

இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றார் தெரசா மே

இங்கிலாந்தின் புதிய பிரதமாராக தெரசா மே இன்று பதவியேற்றுக் கொண்டார்.


 

 
இங்கிலாந்து நாடு ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டும் என்று அந்நாட்டு பெரும்பாலான மக்கள், பொதுவாக்கெடுப்பில் வாக்களித்ததால், அங்கு பிரதமராக இருந்த கேமரூன் பதவி விலக நேர்ந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 
 
இங்கிலாந்தில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், தாமாகவே பிரதமராகவும் நியமிக்கப்படுவார். இந்த இரட்டை பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து எரிசக்தி மந்திரி ஆண்டிரியா லீட்சம், உள்துறை மந்திரி தெரசா மே ஆகிய இரண்டு பேர் இருந்தனர். 
 
திடீர் திருப்பமாக ஆண்டிரியா லீட்சம், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தெரேசா மே இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகியது.  
 
ஏற்கனவே பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அதை ஏற்றுக்கொண்ட ராணி எலிசபெத், புதிய பிரதமாராக தெரசா மேவை நியமித்தார். இந்நிலையில் அவர் இன்று காலை புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். 59 வயதான தெரசா இங்கிலாந்தின் இரண்டாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.