வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (07:43 IST)

காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370 என்ற சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு இந்தியாவில் உள்ள ஒரு சில அரசியல் கட்சிகள் மட்டுமன்றி பாகிஸ்தானும் பயங்கர எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம்? என்று உலக நாடுகள் கேள்வி எழுப்பிய நிலையில், பாகிஸ்தானின் ஆவேசமான கருத்துக்கள் அமெரிக்காவை அதிருப்தி அடைய செய்துள்ளது 
 
இந்தியாவுடன் தூதரக உறவை முடித்துக் கொள்வோம் என்றும், இந்தியாவின் உடனான போக்குவரத்து உறவையும் முடித்துக் கொள்வோம் என்றும் பாகிஸ்தான் நேற்று அறிவித்த நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்கும் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவும் பாகிஸ்தான் துணை போகக் கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. காஷ்மீரில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கையால் மீண்டும் ஒரு புல்வாமா தாக்குதல் நடைபெறும் என பாகிஸ்தான் கூறியதற்கு பதிலடியாக அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் தனது சொந்த மண்ணில் வேரூன்றிய தீவிரவாதத்தை அடக்க பாகிஸ்தான் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. அதே நேரத்தில் வெளிப்படைத்தன்மையும் அரசியல் பங்கேற்பு ஜனநாயகத்தின் அம்சங்கள் என்றும் இவற்றை இந்திய அரசு பின்பற்றும் என்று நம்புவதாவும் அமெரிக்கா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
 
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டம் ஒரே விதமான பாதுகாப்பு என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பாகிஸ்தான் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லையில் தீவிரவாத செயல்களுக்கு துணை போக கூடாது என்றும் அமெரிக்கா அந்த அறிக்கையில் அறிவுறுத்தி உள்ளது