1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. மகளிர் தினம்
Written By சினோஜ் கியான்
Last Updated : வெள்ளி, 6 மார்ச் 2020 (17:39 IST)

மகளிர் தினம் : அம்மா ...நீயே தெய்வம் !

மகளிர் தினம் : அம்மா, நீயே தெய்வம்
தெய்வத்தால் படைக்கப்பட்ட
என்னைச் செதுக்கும்
தலைமைச் சிற்பி நீ.
 
எனக்காய் நீ பல காத தூரங்கள்  நடந்து, 
உப்பு மூட்டைபோல்  என்னைச் சுமந்து ; 
மாரிலும், தோளிலும் என்னைத் தூக்கிக் கொஞ்சி
இளைப்பாராமல் உன் 
பாளம் பாளமாய்ப் பிளந்த உனது 
பித்தவெடிப்புக் கால்களால் நின்று 
வேலை செய்து என்னைப் படிக்க வைத்தாயே ...
 
அதில்தான்  எனக்கான 
இப்பூமியின் சொர்க்கம் உள்ளது!
 
அதுவே என் உலகம் !
 
அப்படி இருக்கும்போது, நீ
கருவில் என்னை வனைத்தது 
இந்த அகில உலகத்தையும் 
என் கைக்குள் வைத்து அரசாள்வதற்குத் தானா ??
 
சொல் !
 
நீ சொல்லும் வார்த்தையைக் கேட்டு 
அதன்படி நடப்பதில்  தான் 
’’என் லட்சியமும், நான் செல்லும் 
பாதைக்கான தீப தீட்சண்யமும்,
உன்னைப் படைத்த அந்தக் 
கடவுளின் தாட்சணயமும் எனக்குக் கிடைக்கும்.’’
 
ஏனென்றால் இந்த உலகில் 
நீ வணங்குவதற்கு என்று 
ஒரு கடவுள் இருக்கலாம்...
அது இல்லாமலும் இருக்கலாம் !
 
ஆனால் எனக்கு என்றும் 
’நீ ஒருத்தி தான் கடவுள் ’
 
எனது முடிவில் 
எனக்கு எப்போதும்
எந்த மாற்றமும் இல்லை !
 
நான் சொல்வதை இப்போதாவது
ஏற்றுக்கொள் 
 
இது சத்தியம் !