1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 26 மார்ச் 2025 (08:16 IST)

‘சிங்கம் பெத்த பிள்ளையின்னு’ உனக்குப் பாடல் எழுதினேன் –மனோஜுக்கு வைரமுத்து அஞ்சலி!

மூத்த இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ், நேற்று இரவு மாரடைப்புக் காரணமாக காலமானார். அவரின் இந்த திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாரதிராஜாவுக்கு நெருக்கமானவரும் அவர் படங்களில் தொடர்ந்து பாடல்கள் எழுதியவருமான வைரமுத்து மனோஜின் மறைவு குறித்துப் பதிவிட்டுள்ளார்.

அவரின் முகநூல் பதிவில்
மகனே மனோஜ்!
மறைந்து விட்டாயா?
பாரதிராஜாவின்
பாதி உயிரே!
பாதிப் பருவத்தில்
பறந்து விட்டாயா?
'சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரியவப்போம் வாடா வாடா'
என்று உனக்கு
அறிமுகப் பாடல் எழுதினேனே
சிங்கம் இருக்கப்
பிள்ளைநீ போய்விட்டாயா?
உன் தந்தையை 
எப்படித் தேற்றுவேன்?
"எனக்குக் கடன் செய்யக்
கடமைப்பட்டவனே!
உனக்கு நான் கடன்செய்வது
காலத்தின் கொடுமைடா" என்று
தகப்பனைத் தவிக்கவிட்டுத்
தங்கமே இறந்துவிட்டாயா?
உன் கலைக் கனவுகள்
கலைந்து விட்டனவா?
முதுமை - மரணம் இரண்டும்
காலத்தின் கட்டாயம்தான்.
ஆனால், முதுமை
வயதுபார்த்து வருகிறது;
மரணம் வயதுபார்த்து
வருவதில்லை
சாவுக்குக் கண்ணில்லை
எங்கள் உறக்கத்தைக்  
கெடுத்துவிட்டவனே!
உன் உயிரேனும்
அமைதியில் உறங்கட்டும்
எனத் தெரிவித்துள்ளார்.