1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2020 (17:59 IST)

’சூரரை போற்று’ படத்தை ரூ.55 கோடிக்கு கேட்கும் பிரபல ஓடிடி நிறுவனம்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக சினிமா படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது மட்டுமின்றி திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆக முடியாமல் சிக்கலில் உள்ளன. இருப்பினும் ஒரு சில படங்கள் அதாவது பொன்மகள் வந்தாள் பெண்குயின் போன்ற படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீசாகி ஓரளவு வரவேற்பையும் வசூலையும் பெற்றன என்பது குறிப்பிடதக்கது
 
இந்த நிலையில் சூரரைப்போற்று, மாஸ்டர் உட்பட பெரிய நடிகர்களின் படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் மாஸ்டர் திரைப்படத்தின் குழுவினர்கள் அந்த படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று உறுதியாக கூறிவிட்டதால் அம்முயற்சியை ஓடிடி தளங்கள் நிறுத்திவிட்டன 
 
தற்போது சூரரைப்போற்று திரைப்படத்தை வாங்க ஓடிடி தளங்கள் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது. சூரரைப்போற்று திரைப்படத்தை வட இந்திய நிறுவனம் ஒன்றும் சூர்யாவும் இணைந்து இந்த படத்தை சுமார் ரூ.30 கோடியில் தயாரித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தை ரூ.55 கோடிக்கு பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று கேட்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
ஆனால் கடந்த சில வருடங்களாக சூர்யாவுக்கு வெற்றிப்படம் வராத நிலையில் இந்த படத்தைதான் அவர் பெரிதும் நம்பியுள்ளார். இந்த படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி விட்டால் அவரது வெற்றியை உறுதி செய்ய முடியாது என்பதால் இந்த படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சூர்யா விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால் நிலைமை அதற்கு சாதகமாக இல்லை என்பதால் விரைவில் ஓடிடி யில் இந்த படம் ரிலீஸ் ஆகும் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது