1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2022 (15:27 IST)

சூர்யா- பாலா இணையும் ‘வணங்கான்’… பிரபல எழுத்தாளரின் கதையா?

சூர்யா நடிப்பில் பாலா இயக்கும் வணங்கான் திரைப்படத்தின் முதல் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் நாச்சியார். அதன் பிறகு அவர் இயக்கிய வர்மா திரைப்படம் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறொரு இயக்குனரை வைத்து முழுப் படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்தனர். இதையடுத்து இயக்குனர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சூர்யா, அவர் இயக்கத்தில் நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே மோதல் எழுந்து, சூர்யா அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது உண்மையில்லை என்று தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்தது.

இந்நிலையில் நேற்று இயக்குனர் பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் மற்றும் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இந்த திரைப்படம் உருவாகி வரும் நிலையில் தமிழில் ‘வணங்கான்’ என்றும் தெலுங்கில் அதே பொருளில் வரும் ‘அச்சாலுடு’ என்றும் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எழுத்தாளரும் இயக்குனர் பாலாவின் நெருங்கிய நண்பருமான ஜெயமோகன் ‘வணங்கான்’ என்ற பெயரில் ஒரு சிறுகதை எழுதியுள்ளார். இப்போது பாலாவின் படத்தின் பெயரும் வணங்கான் என்று இருப்பதால், ஜெயமோகனின் கதையைதான் பாலா படமாக எடுக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே பாலா ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ நாவலை ‘நான் கடவுள்’ திரைப்படமாக எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.