1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 23 மார்ச் 2020 (10:23 IST)

இந்தியா இன்னொரு இத்தாலி ஆகிவிடக் கூடாது – முன்னணி நடிகர் வீடியோ !

கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசியுள்ள நடிகர் சூர்யா இந்தியா இன்னொரு இத்தாலி ஆகிவிடக் கூடாது எனக் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக தமிழ் சினிமா பிரபலங்கள் வீடியோ வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே ரஜினி, கமல் மற்றும் தனுஷ் ஆகியோர் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இப்போது நடிகர் சூர்யாவும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் ‘இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாம் இப்போது பரப்ப வேண்டிய விஷயம் விழிப்புணர்வு தான். ஜல்லிக்கட்டு, வெள்ளம், புயல் போன்றவற்றுக்காக வெளியே வந்து போராடிய நாம், இப்போது வீட்டுக்குள் இருந்தே போராடுவோம். சீனாவை விட இத்தாலியில் கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம், மக்கள் அறியாமையால் வெளியில் சென்றது தான். இந்தியா இன்னொரு இத்தாலி ஆகிவிடக் கூடாது. தவிர்க்கமுடியாத தேவை இருந்தால் மட்டும் வெளியில் செல்லுங்கள். கூட்டம் கூட்டமாக செல்ல இது வெக்கேஷன் டைம் அல்ல, பாதுகாப்பாக குடும்பத்துடன் இருக்க வேண்டிய நேரம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், தன்னை தனிமைப்படுத்தி கொள்ளாமல் வெளியில் செல்வதன் மூலம் அவரை சுற்றியுள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அப்படியொரு மன்னிக்க முடியாத தவறை செய்ய மாட்டீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. பயப்பட வேண்டிய விஷயத்துக்கு பயப்படாமல் இருப்பது முட்டாள் தனம் என்பார்கள். இந்த விழிப்புணர்வை அனைவரிடமும் பரப்புங்கள். குறிப்பாக வயதானவர்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வோம். கொரோனாவை தடுக்க அடுத்த 2 வாரங்கள் மிக முக்கியமானது என்கிறார்கள். எச்சரிக்கையுடன் இருப்போம். வருமுன் காப்போம்’ எனக் கூறியுள்ளார்.