1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 25 செப்டம்பர் 2021 (10:13 IST)

மெல்லிய குரல் மன்னன் SPB - முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று

மறைந்த பாடகரும், இசையமைப்பாளருமான எஸ் பி பாலசுப்ரமணியம் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று. 

 
உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான திரைப் பாடல்களைப் பாடியவர் என்ற கின்னஸ் சாதனைப் படைத்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ் சினிமா ரசிகர்களை தனது மெல்லிய குரலால் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் கட்டிப் போட்டு வைத்துள்ளார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், எந்த மொழியில் பாடல் கொடுத்தாலும் அந்த மொழிக்கேற்ற இயல்பான உச்சரிப்புடன் பாடுவதே இவரது சிறப்பு. 
 
பாடகர் மட்டுமல்லாது நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறைமைகள் கொண்டவர். 1946ம் ஆண்டு ஜூன் மாதம் 4 ம் தேதி மெட்ராஸ் மாகாணத்தில்(தற்போது ஆந்திரப் பிரதேசம்) எஸ்.பி. சம்பமூர்த்தி- சகுந்தலா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர். எஸ்.பி.பி, சாவித்திரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பல்லவி, சரண் என இரண்டு குழந்தைகள். பல்லவி பாடகியாக இருந்திருக்கிறார். சரண் பாடகராகவும் , நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
எஸ் பி பியின் திரைப்பயணத்தின்  முதல் பாடலிலே ரசிகர்களின் காதுக்கு தேன் பாய்ச்சினார் `அடிமைப் பெண்’ படப் பாடலான `ஆயிரம் நிலவே வா’! என்ற அந்த பாடலை இன்றும் மறக்க இயலாது. தன்னுடைய மெல்லிய குரலுக்கு தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து தென் இந்திய  சினிமா ரசிகர்களையும் மதிமயங்கச்செய்திடுவார். 
 
தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளர் விஸ்வநாதன் இசையில் பாட ஆரம்பித்த எஸ்.பி.பி நேற்று இசையமைக்க வந்த ஜி.வி.பிரகாஷ் வரை அனைவரின் இசையிலும் பாடல்களைப் பாடியிருக்கிறார். இளையராஜா, தேவா, வித்யாசாகர், எ.ஆர்.ரகுமான் மற்றும் யுவன் சங்கர் ராஜா என்று கிட்டத்தட்ட அணைத்து இசையமைப்பாளர்களின் இசையமைப்பிலும் பாடிய ஒரே ஒரு பாடகர் எஸ்.பி.பி யாக மட்டும் தான் இருக்க முடியும். 
 
நான்கு மொழிகளில் தேசிய விருதினை வென்றுள்ள எஸ் பி பி தனது 50 வருட சினிமா வாழ்க்கையில் இதுவரை சுமார் 40000 மேற்பட்ட பாடல்களை  பாடி உலக சாதனையைப் படைத்துள்ளார். நதி எங்கே போகிறது என்ற நெடுந்தொடரில் தொடக்கி தற்போது ஏர்டெல் சூப்பர் சிங்கர் வரை சின்னத் திரையில் நடிப்பு மற்றும் நடுவர் என பல்வேறு துறைகளிலும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். 
 
திரைத்துறையில் ஆயிரம் பேர் நட்சதிரங்களாக மின்னலாம் ஆனால் துருவ நட்சத்திரமாக சிலபேரே ஜொலிப்பார்கள், எஸ்.பி.பி ஒரு துருவ நட்சத்திரமாக மாறிவிட்டார். அப்பேற்பட்ட மெல்லிய குரல் மன்னன் எஸ்.பி பாலசுப்ரமணியம் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று.