வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (11:52 IST)

பிச்சையெடுத்து தொழிலதிபரான இளைஞருக்கு ராகவா லாரன்ஸ் செய்யும் உதவி!

பிச்சை எடுத்து அதில் கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து வைத்து இன்று தொழிலதிபராக இருக்கும் வாலிபர் ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாய் உதவி செய்ய விரும்புவதாக ராகவா லாரன்ஸ் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் 
 
மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் இருந்ததால் பிச்சை எடுத்தார். பிச்சை எடுத்த பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மிச்சப்படுத்தி அதில் சேமித்த ரூ.7000ல் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தற்போது  டீ விற்கும் தொழில் செய்து வருகிறார் 
 
இந்த தொழிலில் கிடைக்கும் வருமானத்தை வைத்து, தான் பசியாறியது மட்டுமன்றி தினமும் காலை மாலை இரவு என மூன்று வேளைகளிலும் 10 பேர்களுக்கு இலவசமாக உணவளிக்கிறார். தன்னைப் போல் யாரும் பசியாக இருக்கக்கூடாது என்ற காரணத்தினால் முதியவர்களுக்கு அவர் செய்யும் இந்த உதவியை அந்த பகுதியில் உள்ளவர்கள் பாராட்டி வருகின்றனர்
 
மேலும் தனது லட்சியமாக எதிர்காலத்தில் ஒரு முதியோர் இல்லம் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அதில் அனாதையாக இருக்கும் முதியோர்களை பராமரிக்க வேண்டும் என்றும் அவர் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த லட்சியத்தை தான் தன்னம்பிக்கையுடன் நிறைவேற்றுவேன் என்றும் அதற்கு கடவுள் தனக்கு உறுதுணையாக இருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இந்த இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியிருப்பதாவது: இந்த இளைஞனின் தன்னம்பிக்கையை பார்க்கும் பொழுது வாழ்க்கையில் எப்பேர்பட்ட மனிதனுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும், இவருக்கு என்னால் முடிந்த உதவியாக 1 லட்சம் கொடுக்க ஆசைப்படுகிறேன்.யாரேனும் இவரது தொடர்பு கிடைத்தால் பகிரவும், நன்றி. “இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்’