வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2019 (18:37 IST)

பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி இருக்கிறது: விஷாலை வறுத்தெடுத்த ராதிகா!

தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இரு அணிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இன்று ஒரே நாளில் இரு அணியினர்களும் கமல்ஹாசனை சந்தித்துள்ளதால் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருப்பது தெரிய வருகிறது
 
இந்த நிலையில் பாண்டவர் அணியின் சார்பில் இன்று வெளியான ஒரு வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மூன்று வருடங்கள் பதவியில் இருந்த பாண்டவர் அணியினர் தங்கள் சாதனையை பற்றி இந்த வீடியோவில் குறிப்பிடாமல் சரத்குமார் உள்ளிட்ட முந்தைய நிர்வாகிகளை குறை சொல்வதிலேயே அதிக அக்கறை காட்டியுள்ளனர். இந்த் வீடியோவுக்கு நடிகை வரலட்சுமி ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது நடிகை ராதிகாவும் விஷாலை அறிக்கை ஒன்றின்மூலம் வறுத்தெடுத்துள்ளார். அவர் அந்த அறிக்கையில் கூறியதாவது:
 
23.06.2019 அன்று நடைபெறவுள்ள தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தலை முன்னிட்டு பாண்டவர் அணியினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். சரத்குமார் தலைவராக இருந்தபோது எதையும் செய்யவில்லை என்றும், சங்கத்தில் முறைகேடாக செயல்பட்டார்கள் என்றும், மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கூறிய பழைய பல்லவியை வெட்கமே இல்லாமல் மீண்டும் வெளியிட்டுள்ளது பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி வேடிக்கையாக இருக்கிறது. விஷால் ரெட்டி அவர்களே நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுக்களை இதுவரை நிரூபித்திருக்கிறீர்களா? நீங்கள் கொடுத்த புகார்கள் விசாரணையில் இருக்கும்போது முன்பு சொன்ன பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகிவிடுமா? 
 
உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகள் இருக்கும்போது சரத்குமார் பற்றி பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா? படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பணத்தை எல்லாம் காலி செய்துவிட்டு கோர்ட் வாசலில் நிற்கிறீர்களே? நீங்கள் நீதிமான் மாதிரி வீடியோவை வெளியிட கொஞ்சமாவது அருகதை உண்டா?
 
இன்றைய தலைவர் நாசர் எதைக்கேட்டாலும் அப்படியா இது எனக்கு தெரியாமல் நடந்துவிட்டது என்று வழக்கம்போல் ஓடி ஒளிந்து கொள்வார். இப்படியே நீங்கள் பிரிவினை பேசி செயல்பட்டு வருவது நடிகர் சங்கத்தை ஒற்றுமைப்படுத்தவோ, நலிந்த கலைஞர்களுக்கு நல்லது செய்யவோ ஒருபோதும் உதவாது. 
 
இனியாவது அடக்கத்தோடு செயல்பட முயலுங்கள்
 
இவ்வாறு நடிகை ராதிகா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.